எத்தனை அடிகளில் புதுக்கவிதை எழுதப்பட வேண்டும்
என்றெல்லாம் வரையறை இல்லை. இரண்டடி முதல் எத்தனை
அடிகளில் வேண்டுமானாலும் எழுதப் பெறலாம்.
இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை (அரங்கநாதன்)
என்பது சுதந்திரம் குறித்த இரண்டடிக் கவிதை.
பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பதுமுறை எழுந்தவனல்லவா நீ (தமிழன்பன்)
என்பது மூன்றடியுடையது.
சுதந்திரம் குறித்து அமைந்த,
பழத்தினை
நறுக்க வாங்கிக்
கழுத்தினை
அறுத்துக் கொண்டோம் (எழிலவன்)
என்னும் கவிதை நான்கடியுடையது.
அமுத
சுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் (மேத்தா)
என்பது காந்தியடிகளிடம், இந்தியாவின் பொருளாதார நிலையைக்
குறித்துரைக்கும்
ஐந்தடிக் கவிதை.
வாயிலே
அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்;
கொப்பளித்துக்
கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்;
நீரே அழுக்கு!
(சுப்பிரமணிய ராஜு)
என்பது ஒன்பதடிகளில் அமைந்துள்ளது.
எனவே, கூற விரும்பும் கருத்து முற்றுப்பெறுவதற்குத்
தேவையான அடிகளில் அமையக் கூடியது புதுக்கவிதை என்பது
புலனாகின்றது. அதேவேளையில் சொற்சுருக்கமும்
இன்றியமையாதது.
|