இடைக்கால இலக்கியங்களில் பா வகைகளின் செல்வாக்கைக்
காண முடிகின்றது. சந்தப்பாக்களையும் இடையிடையே பார்க்க
முடிகின்றது.
பத்து அல்லது பதினொரு பாடல்களையுடைய பதிக
அமைப்புப் பெரும்பான்மையாக உள்ளது. அவற்றின் இருமடங்கு,
மும்மடங்கு, நான்மடங்கு அமைப்பையும் காண்கிறோம். அவை
ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பா வகைகளால்
இயற்றப்பட்டுள்ளன.
அகம் அல்லது புறம் சார்ந்த பொருண்மைக்குள் ஒன்றை
மையப்படுத்தியோ அல்லது ஒரு சிலவற்றின் கலவையாகவோ
அமைக்கப்பட்டுள்ள நிலை சிற்றிலக்கிய நூல்களில்
தென்படுகின்றது.
அளவில் காப்பியத்தினும் சிறுமை என்பதாலும் அறம்,
பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் பயப்பதில்
முன்னிற்கும் காப்பியமாகிய பேரிலக்கியத்தினும் அவற்றுள் ஒரு
கூறு குறித்தே விவரிக்கும் சிறுமை என்பதாலும் இவை சிறுமை +
இலக்கியம் = சிற்றிலக்கியம் எனப்பட்டன வாகலாம்.
கலிவெண்பா
பன்னீரடிகளின் மிக்குவரும் வெண்பா வகை கலிவெண்பா எனப்படும். இரண்டிரண்டடிகளில் எதுகை, மோனை, பொருண்மை
அமைந்து ‘கண்ணி’ என்னும் வகை இதனடிப்படையில்
நிலவுகின்றது. இரண்டிரண்டு அரும்பு அல்லது மலர்களை
அடுத்தடுத்துக் கட்டும்
தலைமாலையானது கண்ணி எனப்படுமாறுபோல இவையும் இப்பெயர் பெறலாயின. இவை
தனித்தனிக் கண்ணிகளாகவோ,
தனிச்சொல் பெற்றுத்
தொடர்ச்சியாகவோ அமைவதுண்டு. இவற்றிற்கு அதிகபட்ச அடி
எல்லை குறிப்பிடப் பெறுவதில்லை.
தாயுமானவரின் பராபரக்கண்ணி, குணங்குடியாரின் நிராமயக்
கண்ணி போன்றன தனித்து அமையும் கண்ணிக்குச் சான்றாவனவாகும்.
சான்று :
எல்லோரும் இன்புற்
றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே
(தாயுமானவர்)
தூது, உலா போன்றன தனிச்சொல் பெற்றுத் தொடர்ச்சியாக
வரும் கலிவெண்பாக்களாகும். மதுரைச் சொக்கநாதர்மேல்
பாடப்பட்ட தமிழ்விடு தூது,
உமாபதி சிவாச்சாரியார் பாடிய
நெஞ்சு விடு தூது, பலபட்டடைச் சொக்கநாதப்
புலவர் பாடிய
அழகர் கிள்ளை விடு தூது, கச்சியப்ப
முனிவர் இயற்றிய வண்டு
விடு தூது போல்வனவும், சேரமான் பெருமாள் நாயனார் பாடிய
ஆதியுலா என்னும்
திருக்கயிலாய ஞானஉலா, ஒட்டக்கூத்தர்
பாடிய மூவருலா போன்றனவும் இவ்வகையின.
சான்று :
தித்திக்கும் தெள்ளமுதே
தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோ(டு) உவந்துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்
(தமிழ் விடு தூது)
விருத்தம்
இடைக்காலத்தில் ஆசிரிய விருத்தங்கள், கலிவிருத்தங்கள்
ஆகியவற்றின் செல்வாக்கைக் காணமுடிகின்றது. பன்னிரு சீர்
மற்றும் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்
பிள்ளைத் தமிழ், சதகம் போன்ற நூல்வகை யாப்பாகத்
திகழ்வதைக் காண்கிறோம். குமரகுருபரர் இயற்றிய
மதுரை
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,
முத்துக்குமாரசுவாமி
பிள்ளைத்தமிழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
போன்றனவும்,
அறப்பளீசுர சதகம், கயிலாசநாதர் சதகம் போன்றனவும்
இவ்வகையின.
தேவாரப் பதிகங்கள் முதலானவற்றில் ஆசிரிய விருத்தம்,
கலிவிருத்தம் ஆகியன செல்வாக்குப் பெற்றுள்ளன.
சான்று : ஆசிரிய விருத்தம்
இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன்ஐ யாற னாரே !
(திருநாவுக்கரசர் தேவாரம்)
கலிவிருத்தம்
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்
(பெரியாழ்வார் திருமொழி)
கட்டளைக் கலித்துறை
ஐந்து சீரடி நான்கும் வெண்டளையும் கொண்டதாய்,
கருவிளங்காயால் முடிவதாய் நேரசையில் தொடங்கின் 16,
நிரையசையில் தொடங்கின் 17 என ஒற்றுத்தவிர்த்த
எழுத்துடையதாய் அமைவது கட்டளைக் கலித்துறையாகும்.
நாவரசர் தேவாரத்திலும்
மாணிக்கவாசகரின்
திருவாசகத்திலும் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள்
இடம்பெறுகின்றன, திருவாசகம்
மற்றும்
திருக்கோவையார் முதலிய கோவை நூல்கள் இவ்வகை யாப்பின.
அருணகிரிநாதரின் கந்தரலங்காரம், அபிராமி அந்தாதி
முதலான அந்தாதி நூல்கள் போன்றனவும் இவ்வகையினவேயாகும்.
சான்று :
தனம்தரும் கல்வி தரும்ஒரு
நாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழ லாள்அபி ராமி கடைக்கண்களே !
(அபிராமி அந்தாதி)
இது நிரையில் தொடங்குதலின் அடிதோறும் 17 எழுத்துடையது.
தாழிசை
தரவைக் காட்டிலும் தாழ்ந்த ஓசையுடையது ஆதலின்
தாழிசை எனப்பட்டது. கலித்தொகையின் ஓர் உறுப்பாகிய இது,
பரணி முதலான நூல்களில் தனித்து ஒரு பா வகையாய் இடம்
பெறலானது. எதுகையொன்றுடைய ஈரடிகளால் இயல்வது இது.
ஆசிரியவிருத்தத்தின் செம்பாகம் இது எனல் தகும்.
செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தரின்
தக்கயாகப் பரணி, வைத்தியநாத தேசிகரின்
பாசவதைப் பரணி
போன்றன இவ்வகையின.
சான்று :
பேணும் கொழுநர் பிழைகளெலாம்
பிரிந்த பொழுது நினைந்(து) அவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
கனபொற் கபாடம் திறமினோ
(கலிங்கத்துப்பரணி - கடைதிறப்பு)
(பேணும் = விரும்பும்; கொழுநர்
= கணவர்; கனம் = மேலான; பொற்கபாடம் = கதவு)
சந்தப்பா
அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற நூல்கள் சந்தப்பா
நூல்களாகும்.
சான்று :
தனதனனத் தனதான
தனதனனத் தனதான
இரவுபகற் பலகாலும்
இயலிசைமுத் தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத்
திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே
பரசிவதத் துவஞான
அரனருள்சற் புதல்வோனே
அருணகிரிப் பெருமானே
(திருப்புகழ்)
அருணகிரிநாதரைப் போலவே சந்தம் பாடுவதில்
வல்லவராகச் சவ்வாதுப் புலவர் விளங்கியுள்ளார். பிற்காலத்தில்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருப்புகழ் நடையில்
பாப்பல புனைந்ததால், திருப்புகழ்ச் சுவாமிகள் எனப் போற்றப்
பெற்றுள்ளார். |