3.5 குறிப்பால் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள்

பொருளை வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக
உணர்த்தும் சில குறிப்புச் சொற்கள் இடைச் சொற்களாகக்
குறிக்கப்படுகின்றன.

3.5.1 ஒலிக் குறிப்பாக வரும் இடைச்சொற்கள்

அம்மென, இம்மென, கோவென, சோவென, துடுமென,
ஒல்லென, கஃறென, சுஃறென, கடகடவென, கலகலவென,
திடுதிடுவென, நெறுநெறுவென, படபடவென ஆகிய இவை
ஒலிக்குறிப்புச் சொற்கள்.

எடுத்துக்காட்டு

கோவெனக் கதறி அழுதான்
சோவென மழை பெய்தது
கலகலவெனச் சிரித்தாள்
நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது

3.5.2 அச்சக் குறிப்பைத் தரும் இடைச்சொற்கள்

துண்ணென, துணுக்கென, திடுக்கென, திக்கென போன்றவை
அச்சக் குறிப்பை வெளிப்படுத்தும் சொற்கள்.

எடுத்துக்காட்டு

அவள் துணுக்குற்றாள்
திடுக்கெனத் தூக்கிப் போட்டது
துண்ணெனத் துடித்தது நெஞ்சம்

3.5.3 விரைவுக் குறிப்புச் சொற்கள்

பொள்ளென, பொருக்கென, கதுமென, சடக்கென, மடக்கென,
திடீர் என - போன்றவை விரைவுப் பொருளில் வரும்.

எடுத்துக்காட்டு

பொள்ளெனப் பொழுது விடிந்தது
திடீரென மறைந்து விட்டான்

பிற விரைவுக் குறிப்புச் சொற்களையும் இலக்கியங்கள் வழி
அறிந்து கொள்ளலாம்.

இன்று வழக்கில் இல்லாத பல ஒலிக்குறிப்புச் சொற்கள்
இலக்கியங்களில்     மட்டுமே     காணக்கிடக்கின்றன.
இலக்கியங்களைப் படிக்கும் பொழுது அச்சொற்களின்
குறிப்புப் பொருளை அறிந்து கொள்ளலாம்.