3.1 வெண்பா

‘பா’ வகைகளுள் முதலில் இடம் பெறுவது வெண்பா.

வெண்பாவின் பொது இலக்கணம்

  • வெண்பா

  • (1) சீர் இயற்சீர், வெண்சீர் ஆகிய இருவகைச்
    சீர்களும் இடம் பெறும். ஈற்றடியின்
    ஈற்றுச்சீர் ஓரசைச் சீராகவும் வரலாம்.
    பிறசீர்கள் வாரா.
    (2) தளை இயற்சீர்     வெண்டளை,     வெண்சீர்
    வெண்டளை எனும் தளைகள் மட்டும்
    வரும். பிற தளைகள் கலத்தல் கூடாது.
    (3) அடி வெண்பாவுக்குரிய அடி அளவடி :
    ஈற்றடி மட்டும் சிந்தடியாக வரும்.
    அடி எண்ணிக்கையைப் பொறுத்த
    வரை, குறைந்த அளவு இரண்டடிகள்
    கொண்டு வரும். அதிக அளவு புலவன்
    உள்ளக் கருத்தைப் பொறுத்தது.
    எத்தனை     அடிகளும்     வரலாம்;
    வரம்பில்லை.
    (4) தொடை வெண்பா ஒருவிகற்பத்தாலும் வரும்.
    பலவிகற்பத் தாலும் வரும்.
    (5) ஈறு வெண்பாவின் ஈற்றடி சிந்தடி. அதன்
    ஈற்றுச்சீர்     நாள்,     மலர்     எனும்
    வாய்பாடுகளையுடைய ஓரசைச் சீராகவோ,
    காசு, பிறப்பு எனும் வாய்பாடுகளையுடைய,
    குற்றியலுகரத்தில் முடியும் மாச்சீராகவோ
    இருக்கும்.
    (6) ஓசை வெண்பாவின் ஓசை செப்பலோசையாகும்.

    விகற்பம் என்பது,

    வெண்பாவில் எத்தனை அடிகள் இருந்தாலும் அடிதோறும்
    முதற்சீரில் வண்டு, கண்டு, நண்டு, விண்டு, என்பன போல
    எதுகை ஒத்து அமைந்தால் அது ஒரு விகற்பம் ஆகும். வண்டு -
    கண்டு என முதலிண்டடிகளிலும் திருந்து-விருந்து என அடுத்த
    அடிகளிலும் எதுகை இரண்டு விதமாக அமைந்தால் அது
    இருவிகற்பம் ஆகும். அவ்வாறன்றி ஆறடி உள்ள பாடலில் நாடு-
    காடு, வென்று - சென்று, நலம் - புலம் என்பனபோல
    இரண்டுக்கும் மேற்பட்ட எதுகை அமைப்பு இருந்தால் அது
    பலவிகற்பம் ஆகும்.

  • வெண்பாவின் வகைகள்

  • குறள்வெண்பா
    நேரிசை வெண்பா
    இன்னிசை வெண்பா
    பஃறொடை வெண்பா
    சிந்தியல் வெண்பா

    என வெண்பா ஐந்து வகைப்படும்.

    3.1.1 குறள் வெண்பா

    (1)

    வெண்பாவின் பொது     இலக்கணம் பெற்று
    இரண்டடிகளால்     வரும். அதாவது, முதலடி
    அளவடியாகவும் இரண்டாமடி     சிந்தடியாகவும்
    அமையும்.
    (2) இது ஒரு விகற்பத்தாலும் இரண்டு விகற்பத்தாலும்
    வரும். (யாப்.காரிகை : 24)

    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்

    (குறள் : 395)

    (ஏக்கற்றும் = தாழ்ந்து நின்றும்)

    பாடலின் இரு அடிகளிலும் உடை-கடை
    என ஒரே எதுகை அமைந்துள்ளது.
    ஆகவே இது ஒரு விகற்பக் குறள்
    வெண்பா ஆகும்.

    3.1.2 நேரிசை வெண்பா

    (1) வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று
    நான்கடியாய் அமைவது நேரிசை வெண்பா.
    (2) இரண்டாமடியின் இறுதியில் தனிச்சொல் வரும்.
    இத்தனிச்சொல் முதல் இரண்டடிகளோடு எதுகையால்
    ஒன்றியிருக்கும்.
    (3) நான்கடியும் ஒரே விகற்பமாக வருவதும் உண்டு;
    முதலிரண்டடிகள் ஒரு விகற்பம் பின்னிரண்டடிகள்
    மற்றொரு விகற்பம் என இருவிகற்பமாகவும் வரும்.

    (எ.டு)

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
    சங்கத் தமிழ்மூன்றும் தா

    (துங்கக் கரிமுகத்துத் தூமணி =
    பெருமைக்குரிய யானை
    முகத்தையுடைய விநாயகன்)

    மேற்காட்டிய பாடல் நான்கடியாய், இரண்டாமடி இறுதியில்
    எதுகை ஒத்த (பாலும், நாலும், கோலம்) தனிச் சொல் பெற்று
    வந்துள்ளது. பாலும் - நாலும் ; துங்க - சங்க என
    இருவிகற்பங்கள் கொண்டு அமைந்துள்ளது. ஆகவே இது
    இருவிகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா ஆகும்.

    3.1.3 இன்னிசை வெண்பா

    (1) வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று
    நாலடியால் அமைந்து தனிச்சொல் இல்லாமல் வருவது
    இன்னிசை வெண்பா எனப்படும்.
    (2) இது ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வரும்.

    (எ.டு)

    துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்

    (நாலடியார், செல்வநிலை-2)

    (துகடீர் = துகள்தீர் - குற்றம் இல்லாத, பகடு = எருது, கூழ் =
    உணவு, அகடு = ஒருவரை ஒட்டி; சகடக்கால் = வண்டிச்சக்கரம்)

    இது நான்கடியாய்த் தனிச்சொல் இல்லாமல் துகடீர், பகடு,
    அகடு, சகட
    , என ஒரு விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.

    3.1.4 பஃறொடை வெண்பா

    பஃறொடை (பல்+தொடை) - பல அடிகள் தொகுத்து வருவது

    1. இது, வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்.
    2. நான்கடிக்கு மேற்பட்ட பல அடிகளால் வரும்.
    3. ஒரு விகற்பத்தாலோ பலவிகற்பத்தாலோ வரும்.

    (எ.டு)

    பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
    என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும்
    பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக்
    கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை
    எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்
    திருத்தார்நன் றென்றேன் தியேன்
    (ஓடை=யானை முகத்தில் அணியும் அணி,
    எருத்தம்
    = பிடரி, இலங்கு இலை
    வேல்
    = ஒளி விடும் இலைவடிவ வேல்,
    தென்னன் = பாண்டிய மன்னன்,
    திருத்தார் = அழகிய மாலை, தியேன் =
    தீயேனாகிய நான்)

    இது வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று
    ஆறடியால் அமைந்துள்ளது. பன் - என் - பொன் என
    ஒருவிகற்பமும், கியானை என ஒரு விகற்பமும், எருத்த -
    திருத்தார்
    என ஒரு விகற்பமும் ஆகப் பல விகற்பங்களைப்
    பெற்று வந்துள்ளது. ஆகவே இது பஃறொடை வெண்பா ஆகும்.

    3.1.5 சிந்தியல் வெண்பா

    (1) வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று மூன்றடியால்
    வருவது சிந்தியல் வெண்பா ஆகும்.
    (2) இது இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெற்றோ
    பெறாமலோ வரலாம்.
    (3) ஒரு விகற்பமோ பலவிகற்பமோ பெற்றுவரும்.

    (எ.டு)
    சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
    யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
    கானக நாடன் சுனை

    (சுரை ஆழ = சுரைக்குடுக்கை மூழ்க, வரை = மலை, நீத்து =
    நீந்தும் நிலை, நிலை = நிற்கும் நிலை)

    இப்பாடல் வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று
    மூன்றடியாய்ச் சுரை - யானை - கான எனப் பலவிகற்பத்தால்
    வந்துள்ளது. ஆகவே இது சிந்தியல் வெண்பா ஆகும்.
    (நேரிசைவெண்பா தவிர்ந்த பிற வெண்பாக்களில் ஒன்றுக்கு
    மேற்பட்ட விகற்பங்களைப் பலவிகற்பம் எனக் குறிப்பிடுவது
    இலக்கண மரபு)