4.4 கலிப்பாவின் இனம்

கலிப்பா,

கலித்தாழிசை
கலித்துறை
கலிவிருத்தம்

என்று மூன்று இனங்களைக் கொண்டது.

4.4.1 கலித்தாழிசை

(1) இரண்டு அடிகளோ, இரண்டிற்கு மேற்பட்ட பல
அடிகளோ வரும்.
(2) ஈற்றடி மிகுந்து, ஏனைய அடிகள் தம்முள் அளவொத்து
வரும்.
(3) ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வரும். தனியே
வருவதும் உண்டு.

(எ.கா)

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெங்
கேள்வரும் போழ்தி லெழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தி லெழாலாய்க் குறாலியரோ.
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

இதில் நான்கடிகள் உள்ளன. இறுதியடி மிகுந்து, 5 சீர்கள்
உள்ளன. ஏனைய அடிகள் மூன்றும் அளவொத்து 4 சீர்கள்
கொண்டமைந்துள்ளன.

4.4.2 கலித்துறை

நெடிலடி (ஐஞ்சீர்அடி). நான்காய் அமைவது கலித்துறை
ஆகும்.

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?

(கம்ப. குகப்படலம். 2405)

இது நான்கடியாய், ஒவ்வொர் அடியும் 5 சீர்கள் பெற்று
அமைந்துள்ளது. ஆகவே இது கலித்துறையாகும்.

கலித்துறையுள் கட்டளைக் கலித்துறை என்ற இன வகையும்
உண்டு. இதன் இலக்கணம்:

(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.
(3) ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.
(4) அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று
நீங்க 17 எழுத்தும் வரும்.
(5) ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.

(எ.கா)

அகிலேந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி யசைந்தொருகை
துகிலேந்தி யேந்துந் துணைச்சிலம் பார்ப்பத் துளிகலந்த
முகிலேந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந்
நீர்த்துறைவாய்
நகிலேந்து பூங்கொடி போல்செல்லு மால்நெஞ்சம்
நம்முயிரே

(தஞ்சை.கோ. 27)

இது நெடிலடி நான்காய் அமைந்துள்ளது ; இந்தச் செய்யுளில்
அடிதோறும் ஈற்றுச்சீர் விளங்காயாக அமைந்து, ஏனைய
சீர்களுக்கிடையே வெண்டளை வந்துள்ளது ; நிரையசையில்
தொடங்குவதால் அடிதோறும் ஒற்று நீங்கி 17 எழுத்துகள்
உள்ளன. ஈற்றடியின் ஈற்றுச் சீர் ‘ஏ’ காரத்தில் முடிகின்றது.
ஆகவே இது கட்டளைக் கலித்துறையாகும்.

4.4.3 கலிவிருத்தம்

அளவடி நான்காய் வரும்.

(எ.கா)

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

இது அடிதோறும் 4 சீர் பெற்று, 4 அடியாய் அமைந்துள்ளது.
ஆகவே இது கலிவிருத்தம் ஆகும்.

கலிப்பா பெரும்பாலும் அளவடிகளால் அமைவது. அதில்
இடம்பெறும் அராக உறுப்பு நெடிலடி, கழிநெடிலடிகளைக்
கொண்டிருக்கும். கலிப்பாவின் தாழிசை உறுப்பு ஒருபொருள்
மேல் மூன்றடுக்கி வரும். இவை முன்பு நீங்கள் அறிந்தவை.
இங்கு நீங்கள்     கண்ட     இனங்கள் அளவடிகளாலும்,
நெடிலடிகளாலும் அமைந்துள்ளன. கலித்தாழிசை ஒருபொருள்
மேல் மூன்றடுக்கி வருவதாகவும் உள்ளது. ஆக, இந்த
ஒப்புமைகள் காரணமாகவே இவை கலிப்பாவின் இனங்களாக
வகைசெய்யப் பட்டுள்ளன என்பதை உணரலாம்.