நாயக்க மன்னர்களின் ஆட்சி உரிமை தந்தை மகன்
எனக்
கொடி வழி உரிமையுடையதாக இருந்தது. பேரரசுக்கு உரிய
திறையும் தேவைப்படும்போது படை உதவியும் அளித்தல் நாயக்க
மன்னர்களின் கடமையாக இருந்தது. பாளையக்காரர்களிடமிருந்தும்,
அமர கிராமங்களிலிருந்தும் அலுவலர்கள் மூலம் பெறப்படும் வரிப்
பணம் நாயக்க அரசுக்கு உரிய முக்கிய வருவாயாக இருந்தது.
பாளையக்காரர்கள் நாயக்க அரசருக்குத் தேவைப்படும் போது
படை உதவி அளிக்க வேண்டும்.
சிற்றூர்களில் கர்ணம், மணியக்காரர் தலையாரி முதலிய
பன்னிருவர் அடங்கிய ஆயக்காரர் முறை இருந்தது. கள்ளர்,
மறவர்களின் ஊர்களில் மணியக்காரர் ‘அம்பலக்காரர்’ என
அழைக்கப்பெற்றார். கர்ணம், தலையாரி, மணியக்காரர்
ஆகியோரால் தண்டல் செய்யப் பெற்ற வரிப் பணத்தை அரசு
அலுவலர்களிடம் சேர்ப்பார்கள். அவர் அதனைச் சரிபார்த்து,
பிரதானிக்கு அனுப்புவார் இவ்வாறு வரிப்பணம் இருமுறை
கணக்குப் பார்க்கப் பெறுவதால் அது ‘இருசால்’ எனப்பெற்றது.
ஒரு பெரிய மண்டலம் சீர்மை, வளநாடு, சாவடி (உசாவடி),
நாடு, கோட்டம், பற்று என்ற உட்பிரிவுகளை உடையதாக
விளங்கிற்று.ஊர்கள் பண்டாரவாடை, அமரம், இனாம் என்ற மூன்று
பகுப்புகளில் அடங்கியிருந்தன. பண்டார வாடை என்பது பேரரசின்
நேரடி நிர்வாகத்தில் இருந்த ஊர்களாகும். அமரம் என்பது நாயக்க
அரசுக்கு உரிய ஊர்களாகும். இனாம் அல்லது மானிய கிராமம்
என்பது தனிநபர்களுக்காக அரசால் வழங்கப்பட்ட நிலங்கள் உள்ள
ஊராகும். மதுரை நாட்டில் பாளையம் என்ற பகுப்பின் கீழ்ப் பல
ஊர்கள் திகழ்ந்தன.
மதுரை நாயக்க அரசின் தலைநகரங்கள் |
மதுரைப் பெருநாடு, பிரிவுபெறாத சேலம், கோயம்புத்தூர்,
திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களையும்,
திருவிதாங்கூரின் ஒரு பகுதியையும் தன்னகத்தே கொண்டு
திகழ்ந்தது. கி.பி. 1535-1615 வரை மதுரை நகரே இப்பெரு நாட்டின்
தலைநகரமாக விளங்கியது. பின்னர் கி.பி. 1616 முதல் 1634 வரை
திருச்சிராப்பள்ளி தலைநகராக விளங்கியது.கி.பி. 1634-இல் மீண்டும்
மதுரைக்குமாற்றம் பெற்ற தலைநகரம் கி.பி. 1664 வரை அதே
நிலையில் இருந்தது. பின்னர் கி.பி. 1665 இலிருந்து 1734 வரை
மீண்டும் திருச்சிராப்பள்ளியே தலைநகரமாக விளங்கலாயிற்று.
தமிழகத்தில் ஆட்சிபுரிந்த நாயக்கர்கள் விசயநகரப் பேரரசின்
நாணயங்களைப் புழக்கத்தில் கொண்டிருந்தபோதும்,
தங்களுக்கெனத் தனியாகவும் காசுகளை வெளியிட்டு
வந்தனர். மதுரை, தஞ்சை நாயக்கர்கள் வெளியிட்ட பல காசுகள்
கிடைத்துள்ளன. அக்காசுகளில் நாயக்க அரசர்களின் பெயர்களும்
காணப்பெறுகின்றன. சில காசுகளில் நாயக்க அரசர்களின்
உருவங்களும், தெய்வ உருவங்களும் உள்ளன. தரங்கம்பாடி,
நாகப்பட்டிணம் போன்ற இடங்களில் வணிக மையம் அமைத்த
டேனியர், டச்சுக்காரர், போர்த்துகீசியர் போன்றவர்கள் நாயக்க
அரசர்களின் அனுமதி பெற்று, அவர்கள் கண்காணிப்பின் கீழ்
தங்களுக்கெனத் தனியாகக் காசுகளை வெளியிட்டனர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயக்க அரசர்களில்
பெரும்பாலானோர் வைணவச் சார்புடையவர்களாகத்
திகழ்ந்தபோதும், சிலர் சைவ சமயச் சார்புடையவர்களாகவும்
விளங்கினர். சமணம், கிறித்தவம், இசுலாம் போன்ற பிற
மதத்தவர்களுக்கு ஆக்கம் கொடுத்த சமயப் பொறையுடைமை
நாயக்க மன்னர்களுக்கு இருந்தது.
விசயநகரப் பேரரசர்களும் நாயக்க அரசர்களும்
கோயில்களை
விரிவுபடுத்துவதிலும், உயர்ந்த கோபுரங்களைக்
கட்டுவதிலும்,
மிகுந்த ஆர்வம் காட்டியதால்
கோயிற்கலை தமிழகத்தில்
தழைத்தது. பதினொரு நிலைக் கோபுரங்கள் கட்டுவது,
ஐந்து
அல்லது ஏழு திருச்சுற்றுக்களுடன் கோயில்களை விரிவுபடுத்துவது,
மிகுந்த வேலைப் பாடுகளுடன் உள்ள மண்டபங்களைக் கட்டுவது
போன்ற பணிகள் தமிழகம் முழுவதும் நிகழ்ந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர்,
திருவண்ணாமலை, திருவரங்கம், மன்னார்குடி ஆகிய இடங்களில்
உள்ள உயர்ந்த கோபுரங்கள் நாயக்கர்களின்
கொடையாகும்.
ஓவியக் கலைக்கு மிகுந்த ஆக்கம் தந்தனர் மதுரை, திருவரங்கம்,
பட்டீச்சரம், திருவலஞ்சுழி போன்ற இடங்களில் உள்ள ஓவியங்கள்
குறிப்பிடத்தக்கவையாகும்.
மதுரை நாயக்கர் மகால், தஞ்சாவூர் அரண்மனை, செஞ்சிக்
கோட்டை அரண்மனை ஆகியவை நாயக்கர் காலக் கட்டடக்
கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
|