2.2 பன்னிரு திருமுறைகள்
E


 

2.2.1 ஒன்று முதல் எட்டு வரை

திருஞானசம்பந்தர் பாடிய இசைப்பாடல்கள் முதல் மூன்று
திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நான்கு, ஐந்து, ஆறு
ஆகிய மூன்று திருமுறைகளும் திருநாவுக்கரசர் பாடியன.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்கள் ஏழாம் திருமுறையாகத்
தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வேழு     திருமுறைகளையும்
தேவாரம்     என்று கூறுதல் மரபு. திருஞானசம்பந்தர்
தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர்
பாடல்களை மட்டும் தேவாரம் என்றும், சுந்தரமூர்த்தி
சுவாமிகள் பனுவல் (பாடல்) களைத் திருப்பாட்டு என்றும்
கூறும் மரபும் நிலவி வருகிறது. ஏழுதிருமுறைகள் என்பது
பண்முறையில் அமைந்தது.

 
தலவரிசையில் ஒரு தேவாரத் தொகுப்பும்
உண்டு. அதனை அடங்கன் முறை என்பர்.
மாணிக்கவாசகரின்     திருவாசகமும்
திருக்கோவையாரும்      எட்டாம்
திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தேவாரம்,    திருவாசகம் ஆகியவற்றின்
சிறப்பு அறிமுகம் அடுத்து வரும் மூன்றாம்
பாடத்தில் வழங்கப்பட்டுள்ளது.
நால்வர்

2.2.2 ஒன்பது முதல் பன்னிரண்டு வரை

எஞ்சிய திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு
என்ற இரு நூல்களின் தொகுப்பாகும்.
திருவிசைப்பாவை திருமாளிகைத்தேவர் முதல் சேதிராயர் ஈறாக
ஒன்பது பேர் பாடியுள்ளனர். ஒரே பதிகமான திருப்பல்லாண்டு
சேந்தனார் என்பவரால் பாடப்பட்டது. பத்தாம் திருமுறையாகத்
திருமந்திரம் தொகுக்கப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் திருமூலர்
என்பவர். பதினொராம் திருமுறை பாடிய ஆசிரியர் பன்னிருவர்.
இந்நூலுள் திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் முதல்,
நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருநாவுக்கரசர் திரு ஏகாதச
மாலை
உள்பட நாற்பது நூல்கள் இடம் பெற்றுள்ளன.
பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர்புராணம். இதனைப்
பெரியபுராணம் என்று கூறுதலே பெரிதும் வழக்கத்தில் உள்ளது.
இதைப் பாடியவர் சேக்கிழார். பெரியபுராணம் பற்றிய விரிவான
செய்திகள் நான்காவது பாடத்தில் இடம் பெற்றுள்ளன. எஞ்சிய
திருமுறைகளையும், அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிய
செய்திகள் தொடர்ந்து தரப்பட்டுள்ளன.

 
பட்டியல் 2
 
பன்னிரு திருமுறைகள்
 
திருமுறைகள்
ஒன்று
இரண்டு
மூன்று

 
}
திருஞானசம்பந்தர்
‘திருக்கடைக்காப்பு’
 
நான்கு
ஐந்து
ஆறு
 
}
திருநாவுக்கரசர்
‘தேவாரம்’
தேவாரம்
 
ஏழூ
சுந்தரர்
'திருப்பாட்டு'
 
எட்டு
மாணிக்கவாசகர்
(திருவாசகம் + திருக்கோவை)
 
ஒன்பது
திருவிசைப்பா
(திருமாளிகைத்தேவர் முதல்
சேதிராயர் ஈறாக ஒன்பதின்மர்)
திருப்பல்லாண்டு (சேந்தனார்)
 
பத்து
திருமந்திரம் (திருமூலர்)
 
பதினொன்று
பன்னிருவர் பாடிய 40 நூல்கள்
 
பன்னிரண்டு
திருத்தொண்டர் புராணம்
(பெரிய புராணம்) (சேக்கிழார்)

திருஞானசம்பந்தர் பாடல்கள் 'திருக்கடைக்காப்பு' என்றும்,
திருநாவுக்கரசர் பாடல்கள் 'தேவாரம்' என்றும், சுந்தரர்
பாடல்கள் 'திருப்பாட்டு' என்றும் வழங்கப்பட்டது