2.4 பழங்காலத் தன்மை வினைமுற்று

     முற்காலத்தில் பயன்படுத்தப் பெற்ற சொற்கள் பல
இக்காலத்தில் முற்றிலும் வழக்கில் இல்லாமல் போயின. தன்மை
வினைமுற்றுச் சொற்களில் இத்தகைய முறையில் வழக்கிழந்தவை
சில உள்ளன. இவற்றையே நாம் பழங்காலத் தன்மை
வினைமுற்றுகள் எனப் பிரித்துக் கூறுகிறோம்.

    தெரிநிலை வினைச்சொற்களில் இடைநிலைகளே காலம்
உணர்த்துவது இயல்பு. இதற்கு மாறாக, இங்கு நாம்
காணப் போகின்ற தன்மை விகுதிகள்     காலம்
உணர்த்துவனவாக
உள்ளன.

    இவை இக்காலத்தில் வழக்கில் இல்லை ஆதலால்
தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைத்தல் ஆகாது. பழைய
நூல்களைப் படிக்கும்பொழுது இத்தகு சொற்கள் வரும்
இடங்களில் பொருள் உணர்வதற்கு இவற்றைத் தெரிந்து
கொள்வது தேவையாகிறது. இவ்வகையில், காலம் காட்டும்
தன்மை ஒருமை விகுதிகளை இனிக் காண்போம்.

2.4.1 ஒருமை வினைமுற்று

    தன்மை ஒருமையில் கு, டு, து, று ஆகிய விகுதிகள்
காலம் உணர்த்துவனவாகப் பயன்பட்டுள்ளன.

கு’ ‘து’ ‘று - எதிர்காலம்
காட்டும் விகுதிகள்.


எதிர்
காலம்
கு’ -‘உண்கு’ யான் - உண்பேன் யான்
என்பது பொருள்
து’ - ‘வருது’ யான் - வருவேன் யான்
என்பது பொருள்
று’ - ‘சேறு’ யான் - செல்வேன் யான்
என்பது பொருள்
டு, து, று இறந்த காலம் குறிக்க வரும்
விகுதிகள்.



இறந்த
காலம்
டு’ - கண்டு யான் - கண்டேன் யான்
என்பது பொருள்
து’ - வந்து யான் - வந்தேன் யான்
என்பது பொருள்
று’ - சென்று யான் - சென்றேன் யான்
என்பது பொருள்

    நிகழ்காலப்     பொருளில்     விகுதிகள்     எதுவும்
பயன்படவில்லை. பழந்தமிழில் ‘அல்’ எனும் விகுதியும் தன்மை
ஒருமை உணர்த்தும். கு டு து று போல ‘அல்’ விகுதி தானே
காலம் காட்டாது. ஆயினும் எதிர்கால இடைநிலைகளாகிய ப்,வ்,
என்பவற்றோடு மட்டுமே சேர்ந்து வரும். அதாவது அவ்விகுதி
இடம்பெறும் தன்மை ஒருமை வினைமுற்று எதிர்காலச்
சொல்லாக மட்டுமே இருக்கும்.

(எ.கா)

யான் உண்பல் (நான் உண்பேன்)
யான் வருவல் ( நான் வருவேன்)

    இங்கு எடுத்துக் காட்டப்பெற்ற கண்டு, வந்து, சென்று
என்பன போன்ற சொற்கள் இக்காலத் தமிழில் வினை எச்சச்
சொற்களாக வரக்கூடியன. அவற்றுக்கும், முற்றுச் சொற்களாக
வந்துள்ள இவற்றுக்கும் இடையே சொல் வடிவில் வேறுபாடு
இல்லை என்றாலும், பொருளில் வேறுபாடு உள்ளது என்பதை
நினைவிற்கொள்க.

2.4.2 பன்மை வினைமுற்று

    தன்மை ஒருமை விகுதிகளாகக் கூறப்பெற்ற கு, டு, து, று
என்பன இறுதியில் மகர ஒற்று ஏற்று கும்,டும்,தும்,றும்
என்றாகித் தன்மைப் பன்மை விகுதிகளாகப் பயன்பட்டுள்ளன.
இவற்றுள் டும், தும், றும் என்னும் மூன்றும் இறந்தகாலம்
உணர்த்துவன.

(எ.கா).

‘டும்’ - உண்டும் யாம் (உண்டோம் யாம்) இறந்த
காலம்
‘தும்’ - வந்தும் யாம் (வந்தோம் யாம்)
‘றும்’ - சென்றும் யாம் (சென்றோம் யாம்)

கும், தும், றும், என்னும் விகுதிகள் மூன்றும் எதிர்காலப்
பொருளில் பயன்பட்டுள்ளன.

(எ.கா).

கும் - உண்கும் யாம் (உண்போம் யாம்) எதிர்
காலம்
தும் - வருதும் யாம் (வருவோம் யாம்)
றும் - சேறும் யாம் (செல்வோம் யாம்)

நிகழ்காலப் பொருளில் மட்டுமே இவ்விகுதி ஏதும் வரவில்லை
என்பது நினையத் தக்கது.