5:1 துறவு

பொதுவாகத் ‘துறத்தல்’ என்றால்     ‘விட்டு விடுதல்’ என்று
பொருள்படும். பிறர் மீது அல்லது இன்னொரு பொருள் மீது
கொண்டிருக்கும் பற்றை விட்டுவிடுதல் அல்லது பற்றுக் கொள்ளாமல்
இருப்பது என்பதாகும்.

‘துறவு’ அல்லது ‘துறத்தல்’ என்பது பற்றிப் பல கருத்துகள், பல
விளக்கங்கள், கூறப்படுகின்றன. குறளுக்கு உரை எழுதிய சமயவாதிகள்
ஒரு வகையாகவும், பகுத்தறிவுவாதிகள் இன்னொரு வகையாகவும்
விளக்கம் தருகிறார்கள். சமயவாதிகள், இல்வாழ்க்கையை விட்டு,
விலகி, மனிதர்கள் நடமாட்டமே இல்லாத காடுகளுக்குச் சென்று,
தனித்து இருந்து, தன்னை ஒறுத்துத் உடல் அசௌகரியங்களை
வலிந்து தானே மேற்கொண்டு தவம் செய்வது என்பர்.

பதவியின் மீது பற்றுக் கொள்ளாத ஒருவர், அதைத்தானாக விட்டு
விடுவதையும், துறவு, அல்லது துறத்தல் என்று குறிப்பிடுவர். தனக்கு
இருக்கும் மிகுதியான பொருள்கள் மீதும், சௌகரியங்கள் (Comforts)
மீதும் பற்று இல்லாதவர்கள், அவற்றை விட்டு விட்டு, தமது அன்றாட
வாழ்க்கைக்குத் தேவையான, குறைந்த அளவுப் பொருட்களுடன்
வாழ்பவர்களையும், வசதிகள் இருந்தும் அவற்றைத் துறந்து வாழ்கிறார்
என்பர்.