3.3 மகாபாரதம்

    வேத வியாசர் படைத்த இதிகாசம் மகாபாரதம். இது, ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களுக்கு அடுத்து ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது.

    அறம் ,பொருள், இன்பம், வீடுபேறு பற்றி இந்நூல் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

    மும்மூர்த்திகளாக பிரம்மா (ஆக்குதல்), விஷ்ணு (காத்தல்), சிவன் (அழித்தல்)     ஆகியோர் மகாபாரதத்தில் முன்னிறுத்தப்படுகின்றனர்.

    இந்துக்களின் புனித நூலாகிய பகவத் கீதை பாரதத்தில் இடம் பெறுகிறது.

    எந்த வழியில் சென்றாலும், எல்லா வழிகளும் இறுதியில்ஈசன் திருவடியில் கொண்டு சேர்த்து, பேரின்ப நிலையைப் பெற்றுத் தரும் எனப் பாரதம் வலியுறுத்துகிறது.

    தருமத்தின் வாழ்வு தன்னை எத்தனை சூது கவ்வினாலும் தருமம் மறுபடியும் வெல்லும் என்று தருமத்தைப் பாரதம் வலியுறுத்துகிறது.

    மகாபாரதக் காலம் கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

    உலக இலக்கியங்களில் அளவில் மிகப்பெரியது ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்டது. வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் தந்தத்தை ஒடித்து எழுதினார் எனக் கூறப்படுகிறது.

3.3.1 பாரத நூல்கள்

    பாண்டுவின் ஐந்து புதர்வர்களாகிய பாண்டவர்களுக்கும், திருதிராஷ்டிரனின் நூறு மக்களாகிய கவுரவர்களுக்கும் நாட்டுக்காக நடந்த போரே குருச்சேத்திரப் போர். 18 நாள் நடந்த போரில் கிருட்டினர் பாண்டவர் பக்கமும், அவரது சேனைகள் துரியோதனன் பக்கமும் நின்று போர் புரிந்ததில் பாண்டவர் வெற்றி பெற்றுத்     தம் நாட்டை மீட்கின்றனர். துரியோதனனுக்கு ஆதரவாகக் கர்ணன் போர் புரிந்து மாண்டான். புகழ் வாய்ந்த மகாபாரத நூல் தமிழில் வெவ்வேறு     கருக்களில்     வெவ்வேறு வடிவங்களில் வெளிவந்துள்ளது.

· பாரதநூல்கள் - தமிழண்ணல் பகுப்பு

    தமிழில் வந்துள்ள பாரத நூல்கள் ஆறு. என்று டாக்டர் தமிழண்ணல் குறிப்பிடுகிறார்.

அவை;

(1)

பெருந்தேவனார் பாரதம்

(2)

பாரத வெண்பா

(3)

வில்லிபாரதம்

(4)

நல்லாப்பிள்ளை பாரதம்

(5)

நளவெண்பா

(6)

நைடதம்

    புறநானூறு எனும் சங்க இலக்கியத்தில் பாரதப் போரில் இரு படைகளுக்கும் ‘பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்’ உணவளித்தமை பற்றிய குறிப்பு உள்ளது.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ. . . .
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழிய
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
             - (புறம்-2)

(அலங்கு = அசையும்; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; ஐவர் = பாண்டவர்; சினைஇ = சினந்து; ஈரைம் பதின்மரும் = கவுரவர்கள்; வரையாது = குறையாது)

3.3.2 பெருந்தேவனார் பாரதம்

    எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகிய ஐந்து நூல்களுக்கும் கடவுள்வாழ்த்துப் பாடிய புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

    இவர் அகவல் யாப்பினால் அமைந்த பாடல்களால் பாரதம்    பாடினார் என உரையாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

    சின்னமனூர்ச் செப்பேடுகள்    பாண்டிய மன்னர்கள் ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' சிறப்புற்றதாகக் காட்டுகிறது.

3.3.3 பாரத வெண்பா

    தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் (கி.பி.9ஆம்நூற்றாண்டில்) பாரத வெண்பா என்ற நூல் தோன்றியது. உரையும் பாட்டும் இணைந்த இந்நூலின் உரைநடைப்பகுதி தமிழும் வடமொழியும் இணைந்த மணிப்பிரவாள நடையில்
உள்ளது . இந்நூலில்

(1)

உத்தியோக பருவம்

(2)

பீஷ்ம பருவம்

(3)

துரோண பருவம்

என மூன்று பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. வெண்பாயாப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. கிடைத்துள்ள 830 பாடல்களில் 818 வெண்பா யாப்பிலும் 6 பாடல்கள் ஆசிரிய  யாப்பிலும், 6 பாடல்கள்    விருத்தப்பா     யாப்பிலும் அமைந்துள்ளன.

3.3.4 வில்லிபுத்தூராரின் பாரதம்

    கி .பி. 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரார் பாரதத்தை எழுதிய பின், அதற்கு முன் தோன்றிய பல பாரத நூல்கள் வழக்கொழிந்து போயின. மிகச் சிறந்து விளங்கிய இந்நூல் ஆசிரியர் பெயரோடு இணைத்தே வில்லிபாரதம் என வழங்கப்படலாயிற்று. இவ்வாறு சிறப்புப் பெற்ற மற்றொரு நூல் கம்பராமாயணம் ஆகும்.

    மூன்றாம்     குலோத்துங்கனின் திருவாலங்காட்டுக் கல்வெட்டு, கி.பி.13ஆம் நூற்றாண்டில் அருணிலை விசாகன் என்பவர் பாரதம் எழுதியதாய்க் குறிப்பிடுகிறது. ஆனால் அது கிடைக்கவில்லை.

    வில்லிபுத்தூராரின் ஊர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள சனியூர்ஆகும். இவர் தமிழிலும் வடமொழியிலும் நல்ல புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். பிறப்பால் வைணவர்; ஆனாலும்சிவனையும் பல இடங்களில் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

· நூல் அமைப்பு

    வில்லிபுத்தூரார் வியாச பாரதத்தையே முதல் நூலாய்க் கொண்டு இந்நூலை இயற்றினார்.

    வேதவியாசர் பாரதத்தைப் பதினெட்டுப் பருவங்களாகப் பாடினார். வில்லிபுத்தூரார் ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம் வரை 10 பருவங்களையே பாடியுள்ளார். இறுதியாகக் கிருஷ்ண பரமாத்மா பாண்டவர்களுக்கு முடிசூட்ட, இரு பங்கு நாட்டினையும் பாண்டவர்களே ஆண்டதாகப் பாரதத்தை நிறைவு செய்துள்ளார்.

    வடமொழிச் சொற்கள் அதிகமாக உள்ள இந்நூலில் 4351 விருத்தப் பாக்கள் உள்ளதாகக் கதிரைவேற்பிள்ளை பதிப்பு குறிப்பிட்டுள்ளது.

· வில்லிபாரதத்தில் வரும் பத்துப் பருவங்கள்

(1)

ஆதி பருவம்

(2)

சபா பருவம்

(3)

ஆரண்ய பருவம்

(4)

விராட பருவம்

(5)

உத்தியோக பருவம்

(6)

வீட்டும பருவம்

(7)

துரோண பருவம்

(8)

கன்ன பருவம்

(9)

சல்லிய பருவம்

(10)

சௌப்திக பருவம்

    வில்லிபுத்தூராரின் கவிதைப் போக்கும் சந்த அமைப்பும் அறிய ஒரு பாடலைப் பார்க்கலாம்.இது உத்தியோக பருவத்தில் கிருட்டினன் தூதுச் சருக்கத்தில் வருகிறது. 12 ஆண்டுகள் காட்டிலும்,ஓராண்டு தலைமறைவாகவும் வாழ்ந்த பாண்டவர்கள் மீண்டும் தமது நாட்டைப் பெற்று ஆளவிரும்புகின்றனர். அதற்காகத் தங்கள் நலம் விரும்பியான கிருட்டினனைத் தூது அனுப்புகிறார்கள் ; செல்வதற்குமுன் ஐவரின் கருத்துகளையும் கேட்டறிய விரும்புகிறான் கண்ணன். அமைதியையே விரும்பும் தருமன் கூறியது.

வயிரம்எனும் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கின்உயர்
            வரைக்காடு என்னச்
செயிர்அமரில் வெகுளிபொரச் சேரஇரு திறத்தேமும்
             சென்று மாள்வோம்
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
             கலந்து வாழ
உயிர்அனையாய் சந்துபட உரைத்தருள்என் றான்அறத்தின்
             உருவம் போல்வான்.

- (உத்தியோக பருவம், கிருட்டினன் தூதுச் சருக்கம்,6)


(வயிரம் = பகைமை ; வரை = மூங்கில் ; வெகுளி = கோபம் ;பொர = போரிட ; கயிரவம் = அல்லி ; குருநாடு = குரு என்னும் மன்னன்
பெயரில் வழங்கிய நாடு ;சந்து = சமாதானம்)

    “பகைமை என்னும் நெருப்பை வளர்த்தால் மூங்கில் காடுகள் எரிவது போல நாங்கள் இருபக்கத்தாருமே வீழ்ந்து அழிவோம். எங்கள் நாட்டில் அல்லியும் தாமரையும் சேர்ந்து இருப்பது போல நாங்கள் இருவரும் இணைந்து வாழும் வகையில் சமாதானம் பேசி வா என்றான்”, தருமத்தின் வடிவம் போன்ற மூத்தவன்.

· நல்லாப்பிள்ளை பாரதம்

    முதலம்பேடு எனும் ஊரைச் சார்ந்த நல்லாப்பிள்ளையார் எழுதிய பாரதம் அவர் பெயரால் குறிக்கப்படுகிறது.

    வில்லிபாரதச் செய்யுள்களை அப்படியே எழுதி, அதற்கு முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான செய்யுட்களை எழுதி 13953பாடல்களால் இப்பாரதம் படைத்துள்ளார்.வில்லிபுத்தூரார் போல் பத்துப் பருவங்களை    மட்டுமே பாடாமல் 18 பருவங்களையும் இவர் பாடியுள்ளார் . காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு .

3.3.5 நளவெண்பா

    மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள நேளாபாக்கியானம் எனும் கதைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் அமைகிறது.

    வெண்பாவிற் சிறந்தவர் எனப் போற்றப்படும் புகழேந்திப் புலவர் இந்நூலைப் பாடியுள்ளார்.

    காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு. நிடத நாட்டு மன்னன் நளன் கதையை இவர் பாடினார்.

· நூல் அமைப்பு

    நளவெண்பா     மூன்று காண்டங்களையும், 424  வெண்பாக்களையும் கொண்ட நூல்.

(1)

சுயம்வர காண்டம்

(2)

கலிதொடர் காண்டம்

(3)

கலிநீங்கு காண்டம்

எனும் மூன்று காண்டங்களை உடையது நளவெண்பா.

· பாட்டால் உயர்ந்த புகழேந்தி

    எளிய உவமைகளால் இனிய கற்பனையைக் கொண்டு வரும் புகழேந்தியைப் படிக்காசுப் புலவர் “கேட்டாலும் இன்பம் கிடைக்கும் கண்டீர் கொண்ட கீர்த்தியொடு- பாட்டால் உயர்ந்த புகழேந்தி’ என்று பாராட்டுகிறார்.

    நளனும்தமயந்தியும் கருத்து ஒருமித்து ஒரு மனத்தவராக  இணைந்து வாழ்ந்தனர் என்பதைப் புகழேந்தி,

ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவர்எனும் தோற்றம் இன்றிப் - பொருவெங்
கனற்குஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று

(இருவர் எனும் தோற்றம் இன்றி = ஒருவராகவே ;வேலான் = நளன்; காரிகை = தமயந்தி ; புனல் = நீர்)

என அழகாக விளக்குகிறார்.

3.3.6 நைடதம்

    நிடத நாட்டு மன்னன் நளனது வரலாறு கூறும் நூல் இது.

    எழுதியவர் அதிவீரராம பாண்டியர். இவர் பிற்காலப் பாண்டியமன்னர் ஆவார்.

    1172 விருத்தப்பாக்களைப் பெற்று இந்நூல் அமைகின்றது.

     நைடதம் புலவர்க்கு ஒளடதம்

என்பர்.

    மகாபாரதம் தமிழில் வேறுவேறு வகைமைகளில் காலம்காலமாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரப் போருக்கு எழுச்சியூட்டப் பாரதியாரும் பாரதக் கதையைப் பாஞ்சாலி சபதமாய்ப் பாடினார்.