2.1 மங்கல இசை

    தமிழகத்தில் நாகசுரம், தவில் கருவியோடு வழங்கப்படும் இசையை மங்கல இசை என்பர். இல்லத்திலும், சமுதாய வழிபாட்டிலும், ஆலய வழிபாட்டிலும் இவ்விசை முக்கியப் பங்கு பெறுவதாலும், மங்கல காரணமான செயற்பாடுகளில் முக்கியப் பங்கு பெறுவதாலும் இதனை மங்கல இசை என்பர். தமிழ்க் குடும்பங்களில் நடைபெறும் திருமணம், காதணி விழா, புகுமனை புகுதல் போன்ற இல்லற நிகழ்ச்சிகளின் பொழுதும், சமுதாய விழாக்களில் தொடக்க நிகழ்ச்சியாகவும், ஆலய வழிபாட்டில் காலையில் தொடங்கும் திருப்பள்ளி எழுச்சி முதல் இரவில் இறைவனைப் பள்ளி எழுந்தருள வைக்கும் வரை இடம்பெறும் நிகழ்ச்சியாகவும் இது விளங்குவதால் இதனை மங்கல இசை என்று அழைக்கின்றனர்.
 

2.1.1 மங்கலமா? மங்களமா?

    இவ்விசையைச் சிலர் மங்கள இசை என்றும் இதனை இசைப்பவர்களை மங்கள இசை மன்னர்கள் என்றும் அழைக்கின்றனர். இது பெருவழக்காகவும் நிலவி வருகிறது. ஆனால் மங்கலம் என்ற சொல்லே பொருத்தமுடையதாகும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலன் மண நிகழ்வு கூறும் காதை மங்கல வாழ்த்துப் பாடல் என்று அழைக்கப்படுகிறது.

மங்கலம் என்ற சொல்லையே இலக்கியங்கள் கையாள்கின்றன.

நங்கை கற்கு மங்கலக் கருவி      - பெருங்கதை மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள் - மணிமேகலை மங்கலம் என்ப மனைமாட்சி     - திருக்குறள்

    இலக்கியங்கள் நற்செயலைக் குறிக்க மங்கலம் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றன. இதன் அடிப்படையில் மங்கல தினம், மங்கல நாண், மங்கல நாள், மங்கலப் பாட்டு, மங்கலப் பொருத்தம், மங்கலப் பாடகர் என்ற சொற்றொடர்கள் வழங்கப்படுகின்றன.

  • பல்பொருள்

    மங்கலம் என்ற சொல் சுபம், ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, வழக்கு என்ற பொருள்களில் கையாளப்படுகிறது.
 

2.1.2 மேளம்

    மங்கல இசைக் குழுவினை மேளக்காரர் என்றும், இவ்விசையை மேள இசை என்றும் வழங்குவர். மேளம் என்ற சொல் குழு என்ற பொருளில் கையாளப்படுகிறது. நாகசுரம், ஒத்து, தவில், தாளம் என்ற நான்கின் தொகுதி மேளம் என்று அழைக்கப்படுகிறது.     இக்கருவிகளை இசைப்பவர்களை மேளக்காரர் என்று அழைப்பர். இதன் அடிப்படையில் கருவிகளுக்குச் சுருதி சேர்ப்பதை மேளங்கட்டுதல என்பர்.

  • சின்ன மேளம், பெரிய மேளம்

    மேளக் குழுவினரைப் பெரிய மேளம் என்று ஆலய வழிபாட்டு மரபில் அழைப்பர். இதில் நாகசுரம், தவில், ஒத்து, தாளம் என்று இசைப்பவர்கள் இருப்பர். இந்நிலையில் ஆலயத்தில் ஆடல் மூலம் இறை வழிபாடு செய்வதனைச் ‘சின்ன மேளம்’ என்று அழைப்பர். ஆலய வழிபாட்டில் ஓர் அங்கமாக விளங்கிய ஆடற்கலை வெளியேறிய பின்பு இவ்வாறு அழைக்கப்படும் மரபும் நின்று விட்டது.