5.1 பண்டைய இசைக் கலைஞர்கள்

     தமிழின் தொன்மை நூலாம் தொல்காப்பியத்தில்பாணர் ,பாடினி, கூத்தர், விறலியர் ஆகியோர் இசைக் கலையிலும்  ஆடற் கலையிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். சங்க  கால இசைக் கலைஞர்களில் இவர்களோடு கோடியர்,  கிணையர், வயிரியர்,யாழோர், பறைவினைஞர் என்ற இசைக் கலைஞர்களும் மிகச் சிறப்போடு போற்றப் பட்டுள்ளனர்.  இவர்கள் இசைநயம் மிக்கவர்களாகவும், புரவலர்களாலும் புலவர்களாலும் பாராட்டப் பெற்றவர்களாகவும் விளங்கி  உள்ளனர். பாடலிசைப்பதிலும், யாழிசைப்பதிலும், பிற  கருவிகளை இசைப்பதிலும் வல்லவர்களாக இருந்தனர். மன்னர், வேளிர், செல்வர்களைப் பாடிப் பெரும் பொருள் ஈட்டியும் வந்துள்ளனர்.

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை

    என்று (புறநானூறு - 335) பாணர்களின் குடிச்சிறப்பைக் கூறுகின்றது.

    பாணர் குலப் பெண் விறலி, பாடினி என்று அழைக்கப்பட்டார். இவர்களும் இசைக் கலையில் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். பாடும் மகளாகப் பாடினியும் ஆடும் மகளாக விறலியும் விளங்கினர்.

ஒருதிறம் பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க
         - (பரிபாடல், 17 : 15)

ஒருதிறம் பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
        - (பரிபாடல், 17 : 17-18)

    சங்க கால இசைக் கலைஞர்களில் பொருநர் என்பவரும் ஒருவராவார். பொருநன் என்ற சொல்லுக்கு  வீரன், அரசன், இசைக் கூத்துக் கலைஞன் என்ற பொருள்கள் உள. பொருநர்கள் அரசவையில் சென்று  இசைக்கும் பெருமை உடையவர்களாக விளங்கினர்.     இவ்விசைக் கலைஞர்கள் பெயரால் பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுபபடை ஆகிய பாடல்கள் பெயரிடப் பட்டுள்ளன. இதன் மூலம் இவர்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற்றிருந்த நிலையை உணரலாம்.