‘நாட்டியம்’ என்ற சொல் ‘ஆடல்’ என்னும் பொருளைத் தரும். ப,ர,த என்ற மூன்று எழுத்துகள் தனித்தனி மூன்று பொருளைத் தரும். இதோ பாருங்கள் இந்த விளக்கத்தை:
ஆக பாவகம், இராகம், தாளம் ஆகிய மூன்றும் (ப+ர+த) சேர்ந்து பரத என்று ஆகிறது. பரத நாட்டியம் என்னும் பொழுது பாவ ராக தாளம் ஆகிய மூன்று தன்மைகளும் ஆடலோடு சேர்கின்றன. எனவே இசையும் தாளமும் அபிநயமும் சேர்ந்த நாட்டியம் "பரதநாட்டியம்" ஆகிறது.
கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் "கூத்தர்". அவர் தம் பெண்பாலார் " கூத்தியர்" இவர்களில் சிலர், விறலியர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் ஆடிப் பாடி அபிநயங்கள் செய்து பழந்தமிழக மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தனர். பரிசாகப் பொன்னும் பொருளும் பெற்று வாழ்ந்தனர். 4.1.2 மாதவியின் பதினொரு வகை ஆடல்கள் ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் சிறந்த மகளிர் மன்னர் சபையில் ஆடினர். சான்றாகச் "சிலப்பதிகாரம்" கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியம். இந் நூலில் ஆடல் நங்கை மாதவி பற்றிக் கூறப்பட்டுள்ளது. சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். இவள் நாட்டிய நன்னூல் கூறும் விதிகளுக்கு அமைய ஆடலை நன்கு பயின்றவள். ஆடலிலும், அழகிலும் சிறந்தவள். வலது கால் முன் வைத்து ஆடல் அரங்கு ஏறினாள். பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, தண்ணுமை என்னும் மத்தள இசை, கைத்தாள இசை ஆகிய ஐந்து வகை இசையும் சேர்ந்தது. இசைக்கு ஏற்ப மாதவி பதினொரு வகை ஆடல்களை ஆடினாள். சிவனாகவும், முருகனாகவும், கண்ணனாகவும் ஆடினாள். இன்னும் மன்மதன், அயிராணி, திருமகள், கொற்றவை ஆகியோராகவும் ஆடினாள். ஒவ்வொரு கதாபாத்திரம் போல் ஆடை, அலங்காரங்கள் அணிந்து அழகாக ஆடினாள். அரங்கேற்றத்தில் மாதவி ஆடிய பதினொரு நிகழ்ச்சிகள் யாவை? அவை எந்தெந்தக் கதாபாத்திரங்களுக்குரிய ஆடல்? இவை பற்றித் தெரிந்து கொள்வோமா?
மாதவிக்கு மன்னன் 1008 கழஞ்சு பொன் பரிசாகக் கொடுத்ததோடு. "தலைக்கோலி" என்னும் உயர்ந்த பட்டத்தையும் அளித்தான். கோயில்களில் ஆடலும் பாடலும் இடம் பெறுவது தமிழர் சமய மரபு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜசோழன் தஞ்சையில் "ஸ்ரீராஜராஜேஸ்வரம்" என்னும் பெரிய கோயிலைக் கட்டினான். இக்கோயிலில் ஆடலும் பாடலும் சிறப்பாக நிகழ ஏற்பாடு செய்தான். தமிழகமெங்கும் ஆங்காங்கிருந்த கோயில்களில் மகளிர் ஆடல் தொண்டு செய்தனர். அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்தான் சோழமன்னன. மொத்தம் நானூறு ஆடல் மகளிரைத் தஞ்சைப் பெரிய கோயிலில் ஆடற் பணி செய்ய வைத்தான். கோயில் சுற்று வீதியில் அவர்களுக்குத் தனித்தனி வீட்டைக் கொடுத்துப் பொருளையும் கொடுத்தான். அத்துடன் உணவையும் அளிக்க ஏற்பாடு செய்தான். இவர்களை முறையாகப் பயிற்றுவிக்க நாட்டிய ஆசான்கள் இருந்தனர். பக்க இசை பாடவும் கருவி இசை வழங்கவும் கலைஞர்கள் இருந்தனர். கோயில்களில் கலைத் தொண்டு சிறப்பாக வளர்ந்தது. இத்தகைய கோயில் பணி, காலம் காலமாகத் தொடர்ந்து நடைபெற மன்னன் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான். இதனால் தமிழகத்தில் நாட்டியப் பரம்பரை முறையாகத் தொடர்ந்தது. காலப் போக்கில் இக்கலை வடிவம் தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர், பரதநாட்டியம் என்று அழைக்கப்பட்டது. 4.1.4 பரதநாட்டியமும் தஞ்சை நால்வரும்
|