1.1 திருமால்
பழமை வாய்ந்த வேதங்களைப் போலவே திருமால்
வழிபாடும் பழமையானது என்பர். எனவே தொன்மைமிக்க
வரலாற்றினைக் கொண்டதாகத் திருமால் நெறியாகிய - வைணவம் விளங்குகின்றது.
  • விஷ்ணு
  • தமிழ் நூல்கள் கூறும் திருமால் வேதங்களில் ‘விஷ்ணு’
    (விட்டுணு) என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளான். பின்னர்
    உள்நாட்டு மக்களுடன் வேத நாகரிகத்தார் கலந்து விட்ட பிறகு,
    திருமாலும் விட்டுணுவும் ஒன்றாகக் கருதப் பட்டனர். இவ்வாறு
    ஒன்றுபட்ட ஐக்கிய நிலையினைப் பண்டைத் தமிழ் நூல்களிலும்
    சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களிலும் அவற்றை அடுத்த
    வந்த ஆழ்வார்களின் அருளிச் (கி.பி.600-900) செயல்களிலும்
    காணலாம்.
  • வைணவம் - வைணவர்
  • காலப்போக்கில் விஷ்ணுவை (விட்டுணு) வழிபடுவோர்
    ‘வைணவர்’ என்றும் இந்நெறி ‘வைணவம்’ என்றும் வழங்கும்
    மரபு தோன்றி நிலை பெற்றது. ‘வைணவன்’ என்னும் சொல்
    ஆழ்வார் பாசுரங்களில் ‘வைட்டணவன்’ என வழங்குகின்றது.

    வன்மையாவதுன் கோயிலில் வாழும்
    வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே

    என்பது பெரியாழ்வார் திருமொழி.

    ‘அறியக் கற்றுவல்லார் வைட்டணவர்’ என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி.