2.1 சமணர்களின் தமிழ்ப் பணி


    பிற சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த பணிகளைக்
காட்டிலும் சமண சமயத்தார் தமிழ் மொழிக்குச் செய்த
தொண்டுகள் மிக அதிகம். அச் சமயத்தார் சங்கம் வைத்தும்,
புதிய இலக்கண, இலக்கிய நூல்களை எழுதியும் தமிழ் மொழியின்
வளர்ச்சியில் ஈடுபட்டனர்.

2.1.1 திரமிள சங்கம்

    பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் என்ற
செய்தி அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் சமணர்களும்
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் என்பது பலருக்குப் புதிய
செய்தியாக இருக்கும்.

    சமணத் துறவிகள் திரமிள சங்கம் (தமிழ சங்கம்) என்ற
ஒன்றை உருவாக்கித் தமிழ்ப்பணி ஆற்றினர். இச்சங்கத்தைத்
திராவிட சங்கம் என்றும் கூறுவர். பழங்காலத்தில் சமணத்
துறவிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் சமண
சங்கமானது நந்திகணம், சேன கணம், சிம்ம கணம், தேவ
கணம்
என்று நான்காகப் பிரிக்கப்பட்டது. இவற்றுள் நந்தி கணம்
புகழ் மிக்கது. இந்த நந்தி கணத்தை இரண்டாகப் பிரித்துப் புதிய
பிரிவுக்குத் திராவிட கணம் என்று பெயரிட்டு, கி.பி. 470இல்
மதுரையில் வச்சிர நந்தி நிறுவினார்.

    வச்சிரநந்தி நிறுவிய இச் சங்கமும் பாண்டியர்கள்
அமைத்த தமிழ்ச் சங்கமும் ஒன்று என்றும், வேறு என்றும் இரு
வேறு கருத்துகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலவி வருகின்றன.

●  தாய்மொழி வழித் தமிழ்ப் பணி

    தமிழகம் வந்த வேற்றுச் சமயத்தினர் அனைவரும் தங்கள்
மதக் கருத்துகளைத் தமிழகத்தில் புகுத்த முனைந்தனர். இவர்கள்
தமிழ் மொழியில் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டனர்.
தமிழர்களின் தாய் மொழியான தமிழ் மொழி மூலம் அவரவர்
தத்தம் சமயக் கருத்துகளை எடுத்துக் கூறினர். இப்பணியில்
மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டவர்கள்
சமணர்களும் பௌத்தர்களும் ஆவர்.