5.2 காப்பியச் செய்திகள் நபிபெருமான், வானவர் தலைவர் ஜிபுறாயிலுடன் உரையாடுகின்ற காட்சியிலிருந்து கதை தொடங்குகின்றது. பெருமானாரின் பேரர்களுக்கு (ஹசன், உசைன்) எதிர்காலத்தில் நிகழப்போகும் துன்ப நிகழ்ச்சியை வானவர் தலைவர் கூறினார். அதுவே ஆர்வ நிலையைத் தூண்டுவதாக அமைகிறது. உசைனாரின் (நபி பேரர்) வரலாறும், கர்பலா என்னுமிடத்தில் நடந்த படுகொலையும் கனகாபிசேக மாலையின் பாடுபொருள்கள். உசைனார் படுகொலைக்குப்பின் எதிராளிகள் அழிக்கப்பட்டனர். அன்னாரின் மகனான செயினுலாபீதீன், அரசுப் பதவி ஏற்கிறார். பின்னர் இன்பியல் காப்பியமாக முடிவுறுகிறது. 5.2.1 நபிகள் நாயகத்தின் மறைவு முகம்மது நபிகள் அவர்களின் மறைவு அறிந்து நாடு துன்பத்தில் மூழ்கியது. இதனைப் பல பாடல்களில் வருணித்துள்ளார் கவிஞர். வான் இரங்கி அழுதது. வானோர் இரங்கி அழுதனர். சந்திரன், சூரியன், நட்சத்திரம் ஆகியவையும் இரங்கி அழுதன. நெருப்பு இரங்கி அழுதது. காற்று இரங்கி அழுதது. பூமி கரைந்து இரங்கி அழுதது. பொழுது இரங்கி அழுதது. உணவு வகைகள் இரங்கி அழுதன. எல்லாமே திகைத்து அழுதன. உலகில் உள்ள உயிருள்ளவை உயிரற்றவை எல்லாமே இரங்கி அழுதன. இஸ்லாமிய மார்க்கமே அழுதது என்பதை,
(வான் = வானம், வானோர் = வானவர்கள், மதி = சந்திரன், பானு = சூரியன், உடு = நட்சத்திரம், கான் = காற்று, போதி = பொழுது, தீன் = உணவு, இஸ்லாமிய மார்க்கம்) எனப் பாடியுள்ளார். படைப்பினங்களுக்குக் காரணம் முகம்மது என்ற கருத்தை வெளிப்படுத்துவதற்காகவே நபிகள் நாயகத்தின் மறைவால் படைப்பினங்கள் எல்லாமே இரங்கி அழுதன எனப் பாடினார், 5.2.2 மன்னனின் கடமை உணர்வு ஆட்சியில் உள்ள அரசன், தாய் போன்று தன் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உடையவன் ஆவான். இதனைப் புலவர்,
(தோயம் = நீர், உவரி = கடல், வசுமதி = வசுதை,பூமி) என்று பாடுகிறார். கடலால் சூழப்பட்ட உலகில் வாழ்கின்றவர்களுக்கு அவர்களுடைய மன்னன், தாய் போல் பணிபுரிந்து பாதுகாக்க வேண்டும்; சுயநலம் மறந்து, தன் பிள்ளைகளின் நலமே தன்னலம் என வாழ்கின்ற தாய் போன்று அரசன் தன் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அரசன் தாயைப் போல, தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து சங்க கால இலக்கியங்களான பெரும்பாணாற்றுப்படையிலும் (478 - 479), மலைபடு கடாத்திலும் (359-360) காணலாம். 5.2.3 திருக்குறள் ஈடுபாடு திருக்குறள் கருத்துகள் கனகாபிசேக மாலையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, கைசர் நாட்டை உமறு கத்தாபின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்து வரும் மகதி என்பாரின் செங்கோன்மையைப் பற்றிக் கூறும்போது, இறை மாட்சி அதிகாரக் கருத்துகளை அமைத்துப் பாடுகிறார். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு முதலியவற்றைப் பாதுகாப்பு (அரண்) ஆகக் கொண்டு, கடுஞ்சொல் கூறாது காட்சிக்கு எளியவராய், மகதி என்பவர் துன்பமில்லாதவாறு நேர்மையான ஆட்சி செய்தார். மேலும் தன் வெண்கொற்றக் குடையின் கீழ் சிறிதும் கோல் கோடாமல் ஆட்சி செய்து பாதுகாத்தார். இதனை,
என்று குறிப்பிடுகிறார். இதில் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை பற்றிக் கூறும் வள்ளுவரின் திருக்குறள் செல்வாக்கைக் காணலாம். |