3.4 வஞ்சிப்பா

வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்:

(1) சீர் வஞ்சியுரிச்சீர்     எனப்படும் கனிச்சீர்கள்
மிகுந்துவரும். பிறசீரும் கலந்து வரலாம்.
(2) தளை ஒன்றிய, ஒன்றாத     வஞ்சித் தளைகள்
மிகுந்துவரும்; பிறதளைகளும் கலக்கலாம்.
(3) அடி வஞ்சிப்பா குறளடியால் அமையும். சிந்தடியால்
அமைவதும் உண்டு.
(4) ஈறு வஞ்சியடிகளின் முடிவில் ஒரு தனிச்சொல்
வந்து, பின்னர் ஆசிரியச் சுரிதகம் வந்து
வஞ்சிப்பா முடியும்.
(5) ஓசை வஞ்சிப்பாவின் ஓசை தூங்கல் ஓசையாகும்.

  • வஞ்சிப்பாவின் வகைகள்

  • 1. குறளடி வஞ்சிப்பா
    2. சிந்தடி வஞ்சிப்பா

    என வஞ்சிப்பா இருவகைப்படும். குறளடிகளால் அமைவது
    குறளடி வஞ்சிப்பா, சிந்தடிகளால் அமைவது சிந்தடி வஞ்சிப்பா.

    3.4.1 குறளடி வஞ்சிப்பா

    வஞ்சிப்பாவின் பொது     இலக்கணங்களைப் பெற்றுக்
    குறளடிகளால் வருவது குறளடி வஞ்சிப்பா ஆகும்.

    (எ.டு)

    செங்கண்மேதி கரும்புழக்கி
    அங்கண்நீலத் தலரருந்திப்
    பொழிற்காஞ்சி நிழற்றுயிலும்
    செழுநீர்
    நல்வயற் கழனி யூரன்
    புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே

    (மேதி = எருமை, உழக்கி = மிதித்து, நீலம் = நீலமலர், அலர்
    = மலர், ஆனா = குறையாத, வண்மை = வள்ளல் தன்மை)

    முதல் மூன்றடிகள் வஞ்சித்தளை
    அமைந்த குறளடிகள்,‘செழுநீர்’ என்ற
    தனிச்சொல் பின்வருகிறது : அதன்பின்
    வரும் இரண்டடிகளும் ஆசிரிய ஓசை
    அமைந்த ஆசிரியச் சுரிதகம்.இவ்வாறு
    வந்தமையால் இது குறளடி வஞ்சிப்பா
    ஆகும்.