2.0 பாட முன்னுரை

    தமிழரின் பொற்காலம் எனக் கருதப்படுவது சங்க காலமாகும்.
இங்கு குறிக்கப்படும் சங்கம் என்பது கடைச்சங்கமாகும்.
இக்காலத்தில் எழுந்த இலக்கியம் உலகின் பழைமையான
இலக்கியச் செல்வத்தின் ஒரு பகுதியாக அமைகிறது. சமயச்
சார்பற்ற உயர்ந்த இலக்கியமாக இது போற்றப்படுகிறது.
இக்காலத்தில் தனித்தனிச் செய்யுட்களை இயற்றுவதே வழக்கமாக
இருந்தது. அங்ஙனம் இயற்றப்பட்டவை பல்லாயிரக்கணக்காக
இருந்திருக்க வேண்டும்.     அழிந்தவை     போக இன்று
எஞ்சியிருப்பவை 2381 செய்யுட்கள். இவை மூன்றடி முதல் 782
அடி வரை அமைந்தவை. இவற்றை இயற்றியோராக 473 புலவர்கள்
அறியப்படுவர். பல பாடல்கட்கு ஆசிரியர் யார் எனத்
தெரியவில்லை. இவை அகம், புறம் என்ற இலக்கணக்
கட்டுக்கோப்புடன் படைக்கப்பட்டவை. இவை மன்னர் பலர்
முயற்சியாலும் அறிஞர்களின்     உழைப்பாலும் தொகுத்துக்
காக்கப்பட்டுள்ளன. பண்டைத் தமிழரின் அரசியல், சமூக, சமயப்
பண்பாட்டு வரலாற்றினை வரைய விலைமதிப்பற்ற செல்வமாகப்
பயன்படும் சங்க இலக்கியங்களின் சிறப்பை உணர்த்துவது
இப்பாடம். இதில் சங்க காலம் பற்றியும், சங்கத் தொகைநூல்கள்
உருவானமை பற்றியும், அத்தொகைகளில் இடம்பெறும் தனித் தனி
நூல்களின் அமைப்பு, சிறப்பு ஆகியவை பற்றியும் கூறப்படும்.