1.0 பாட முன்னுரை

தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று பரணி இலக்கியம்.
போர் பற்றிய நிகழ்ச்சிகளே இந்த இலக்கிய வகைக்கு
அடிப்படையாகும். சங்க காலத்தில் போர் பற்றிய பாடல்கள்
உண்டு. இவை புறம் என்று கூறப்பட்டன. இவை
தனிக்கவிதைகளாக இருந்தன. சிற்றிலக்கிய வகையாகப் போர்ச்
செய்திகள் வளர்ந்த போது பரணி ஆக உருப்பெற்றன.
போர்த் தெய்வம் கொற்றவை. இதனைச் சங்க இலக்கியங்களில்
இருந்து அறிய முடியும். போரில் பேய்கள், பூதங்கள்
பங்கேற்கும் என்று கருதுவது ஒரு நம்பிக்கை. இதனையும்
சங்க இலக்கியங்களின் மூலம் அறியலாம். இவற்றோடு போர்
நிகழ்ச்சிகள் சேர்ந்து பரணியாக வடிவு எடுத்து உள்ளன.
பரணி இலக்கியம் பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.