6.2 மாந்தர் வருணனை

கவிதைக்கு அடிப்படையானது கற்பனை. கவிதையின் வெற்றியில்
கற்பனையின் பங்கு மகத்தானது. படைப்போரையும் பயில்வோரையும்
ஒரே தடத்தில் அழைத்துச் செல்வது கற்பனை ஆகும். உவமை,
உருவகம், வருணனை
என்று பல வடிவங்களில் கற்பனை
வெளிப்படும்.

புலவன் தன் கருத்தை வெளிப்படுத்தும் வழி முறைகளில் ஒன்றான
வருணனை     முறை சிறுபாணாற்றுப்படையில் அமைந்துள்ள
தன்மையைத் தொடர்ந்து நோக்கலாம்.

6.2.1 விறலியர் வருணனை

புரவலனை நாடிப் பாணர்கள் தங்கள் விறலியருடன் சென்றனர்.
அவ் விறலியர்களின் அழகை நத்தத்தனார் வருணிக்கும் திறம்
வியத்தற்கு உரியது.

அழகை வருணிப்பதில் தலையில் தொடங்கிக் கால் வரை
வருணிப்பது ஒரு முறை. இதனைக் கேசாதிபாத வருணனை என்பர்.
அதுபோல் காலில் தொடங்கித் தலை வரை வருணிப்பது மற்றொரு
முறை. இதனைப் பாதாதி கேச வருணனை என்பர். இவற்றுள்
விறலியரைக் கேசாதிபாத வருணனை முறையில் வருணிக்கிறார் புலவர்.
இது இரண்டாம் பாடத்தில் 2.3.2 என்னும் பகுதியில் விரிவாகத்
தரப்பட்டுள்ளது. விறலியர் வருணனையில் ஒரு சிறு பகுதியை மட்டும்
இங்குக் காண்போம்.

விறலியர்கள் அழகு ஓவியங்களாக உள்ளனர். அவர்கள்
நெடுந்தொலைவு நடந்து வந்தமையால் அவர்களின் அழகிய,
மென்மையான பாதங்கள் சிவந்து போயின. இதனைக் கண்ணுற்ற
புலவருக்கு நீண்ட தூரம் ஓடி இளைத்த நாயின் நாக்கு நினைவிற்கு
வந்தது.

நீண்ட தூரம் ஓடிய நாயின் நாக்கும் சிவந்து இருக்கும். எனவே,
விறலியரின் சிவந்திருந்த பாதங்கள் ஓடி இளைத்த நாயின் நாக்குப்
போன்று சிவந்து இருந்தன. அதாவது ஓடி இளைத்த நாயின் நாக்குப்
போன்று செம்மையும் மென்மையும் உடையதாம் விறலியரின் பாதம்.
இதனைக் காட்டும் அடிகள் இதோ:

.. . . . . . . . . . . . . சாஅய்
உயங்குநாய் நாவின் நல்லெழில் அசைஇ
வயங்கிழை உலறிய அடியின்

(அடிகள் 16-18)

6.2.2 பாணன் வருணனை

பாணனின் வறிய நிலையைப் படிப்போர் பேரிரக்கம் கொள்ளும்
வகையில் புலவர் எடுத்துக்காட்டி உள்ளார். பாணனின் வறுமையை
உள்ளவாறே காட்டுவதாகப் புலவனின் கற்பனை அமைந்துள்ளது.
வறுமையின் அடையாளச் சின்னமாக அவனது வீடு இருக்கிறது.
அவன் வீட்டின் வறுமை அழகு இது:

வீட்டுச் சுவர் மிகவும் பழைமையானது. ஆங்காங்கே கறையான்
புற்றுகள் கிளம்பி இருந்தன.

வீட்டுக் கூரையில் கீற்றுகள் இருந்தாலும் இல்லாதது போன்றே
காட்சி அளித்தது.

வீட்டுக் கூரையின்கண் இருந்த கழிகளின் கட்டுகள் அறுந்து
கீழே விழும் நிலையில் கழிகள் இருந்தன.

வீட்டில் உணவு சமைத்துப் பல நாட்கள் ஆயிற்று. அதனால்
அடுக்களை (அடுப்படி) காளான் பூத்துக் கிடந்தது. (அடிகள்
132-134)

இக்கற்பனை பாணனின் வறிய இல்லத்தை ஓவியக் காட்சிபோல்
படிப்போர் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.