2.6 சிந்தனை உரைநடை

எழுதுவோனின் சொந்த ஆளுமை முனைப்பாகத் தெரியும்
வகையில் எழுதப்படுவது சிந்தனை உரைநடை (Contemplative
prose).
தன்னுணர்ச்சிப் பாங்கான கட்டுரைகள், ஆன்மிக
அனுபவங்களை உணர்த்தும் கட்டுரைகள் முதலியன இவ்வகையில்
அடங்கும்.     (சிலர் சிந்தனை உரைநடையை 'வருணனை'
உரைநடையாகக் கொண்டு ஒன்றாகவே அதனுள் அடக்குவர்)
 

சிந்தனைக் கட்டுரைகளில் சிறுசிறு பத்திகள் இடம்பெற்று அவை
சூத்திர வாய்பாடுபோல் சுருக்கமாகவும், சுவையாகவும் இருக்கும்.
 

கண்ணதாசனின் கவிதாஞ்சலி என்ற கட்டுரையில் சிந்தனை
உரைநடை அமைந்துள்ளது.
 

“குழந்தை பிறக்கும் போதே ஒவ்வொரு வருஷத்துக்கும் டைரி
எழுதி     குழந்தையின் கையிலேயே கொடுத்து இறைவன்
அனுப்பியிருக்கலாம்.
 

விதையைத் தகப்பன் உடம்பிலும், உரத்தைத் தாயின் உடம்பிலும்
வைத்ததோடு நிலத்துக்குடையவனின் வேலை முடிந்துவிட்டது.
 

மழையை எதிர்பார்த்தும், வெயிலைத் தாங்கிக் கொண்டும்
வளர்ந்து, மலர்ந்து, கருகிப் போக வேண்டிய பொறுப்பு
செடியினுடையதே. நடக்கும் அன்றைய நாளுக்குக்கூட நம்மாலே
பொறுப்பேற்க முடியவில்லை.
 

இன்னது நடக்கும் என்று திட்டமிட்டுக் கொண்டு காரியம் செய்து
வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர்? விதி என்னும் பிரவாகத்தின்
சக்தி அழுத்தமானது?” இவ்வாறு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டச்
செய்யும் சிந்தனை உரைநடை கண்ணதாசனின் கட்டுரைகளில் இடம்
பெற்றுள்ளது. இதுபோன்ற எம்.எஸ்.உதயமூர்த்தியின் ‘ஆன்மீகச்
சிந்தனை’க் கட்டுரைகளும் இப்பிரிவில் அடங்கும்.