3.2 படைப்புகளும் உட்பொருளும்

ஓர் ஆசிரியரின் உரைநடையைப் பற்றி அறிந்து
கொள்வதற்கு அவரது படைப்புகள் துணை செய்கின்றன.
அப்படைப்புகளின் உட்பொருள்களும் பயன்படுகின்றன.
ஆதலின் பாவாணரின் படைப்புகளையும் அவற்றில்
இடம்பெற்றிருக்கும் உட்பொருள்களையும் அறிந்து கொள்வது
ஏற்றதாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
 

பாவாணர் தம் வாழ்நாள் முழுவதும் ஏறத்தாழ நாற்பது
நூல்களை எழுதியுள்ளார்.     இவருடைய படைப்புகள்
அனைத்தும் தமிழின் தொன்மையை நிறுவுவதையும் தமிழரின்
புகழைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டவை எனலாம்.

பாவாணர் எழுதியுள்ள நூல்கள் ஏறத்தாழ நாற்பது எனினும்
அவற்றுள் சில நூல்களின் பெயர்களையேனும் நீங்கள் அறிந்து
கொள்ள வேண்டும். எனவே சில நூல்களின் பெயர்கள்
மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.
 

(1) தமிழ் இலக்கிய வரலாறு
(2) தமிழ் வரலாறு
(3) தமிழர் வரலாறு
(4) தமிழர் மதம்
(5) தமிழர் திருமணம்
(6) முதல் தாய்மொழி
(7) வடமொழி வரலாறு
(8) திருக்குறள் தமிழ் மரபுரை
(9) திரவிடத் தாய்
(10) பழந்தமிழாட்சி

கட்டுரையாசிரியர்களின்     நடை     அக்கட்டுரைகளின்
உட்பொருளைக் கொண்டும் அமைதல் இயல்பு. எனவே அவ்
உட்பொருள்களைப்     பட்டியலிட்டுக்     காண்பதும்
தேவையானதாகிறது. அவை,
 

(1) மாந்தன் தோன்றிய இடம் அழிந்து போன குமரிக்
கண்டமே.
(2) மாந்தன் பேசிய முதல்மொழி தமிழே; அதுவே உலக
முதன்மொழி.
(3) தமிழ் திராவிடத்துக்குத் தாய்; ஆரியத்துக்கு மூலமும்
ஆகும்.
(4) தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே
குறிக்கோள்.
(5) இன்றைத் தமிழகத்திற்கு அணியாய் இருப்பதும்,
தமிழன் தான் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கு
ஆவணம் போல் உதவுவதும் தொல்காப்பியம் ஒன்றே.

என்பன.