5.0 பாடமுன்னுரை
இந்தியத் தத்துவ ஞான வரலாற்றில் சங்கரர் (கி.பி. 788-820),
இராமாநுசர் (கி.பி. 1017-1137), மத்வர் (கி.பி. 1199-1278) என்னும்
மூன்று     பெயர்களும்     முக்கியமானவை.     இம்மூவரும்
ஞானப்பேரரசர்களாக விளங்கியவர்கள். அவர்கள் முறையே
அத்வைதம், விசிட்டாத்வைதம்,
துவைதம் என்னும்
கோட்பாட்டை வழங்கியவர்கள். இம்மூவருள்ளும் சமய தத்துவ
எல்லையைத் தாண்டிப் பொதுநிலையில் உள்ள பலராலும்
அதிகம் பேசப்பெற்றவர் இராமாநுசர் ஒருவரே.

வைணவ சமயம்     இன்றளவும் சிறப்புடன் நிலை
பெற்றிருப்பதற்குக் காரணமானவர்     இராமாநுசர். சுமார்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டைச் சேர்ந்த
திருப்பெரும்பூதூரில் பிறந்து நெடுங்காலம் (கி.பி. 1017-1137)
வாழ்ந்தவர் அவர். அந்த நெடிய வாழ்க்கை சமய உலகுக்கும்
சமூகத்துக்கும் எண்ணற்ற பயன்களைத் தந்தது. அவற்றுள்
முக்கியமானவை     யாவும்     இப்பாடத்தில் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன.