xiii
பொருத்தம்.
செய்யுளுக்கும் பொருளுக்கும்
உரிமை பூண்டிருப்பதைத் தள்ள இயலாது. நன்னூலார் ‘பல் வகைப் பண்பும்
பகர் பெயர் ஆகி’ என்றமையாலும், ‘பெயர்வினை ஒருவா’ என்றமையாலும்
அவர்க்கு, உரிச்சொல் பெயரேயாம் என்பதும், அது பெயரிலும் வினையிலும்
வரும் என்பதும் கருத்தாதலின், உரிமை, பெயர்க்கா பெயர்
வினைகளுக்கா என்பதில் தடுமாற்றம் ஏற்படுகின்றது. தொல்காப்பியர்
உரிச்சொல் பெயராகும் எனக் கூறவில்லை. பெயரிலும் வினையிலும்
தடுமாறும் எனக் கூறினார் (உரி. 1). அவர் இரண்டில் ஒன்றற்கோ
இரண்டுக்குமோ உரிமைப்படுத்திக் கூறவில்லை.
4. பண்புக்கு உரிமை பூண்ட சொல் உரிச்சொல். இக்கருத்தும் ஏற்பதற் கில்லை.
பண்புக்கு உரிமை பூண்ட சொல் பெயர்ச் சொல். பண்பு என்பது பொருட் பண்பும்
தொழிற்பண்பும் குறிக்கும். அதனால் ‘பல்வகைப் பண்பும்’ என்றார் நன்னூலார்.
அப்பண்புகளைக் குறிக்கும் சொற்கள் பெயர்ச்சொற்கள் எனவே படும். அதனால்
நன்னூலார் பல்வகைப் பண்பும் பகர் பெயராகி வரும் உரிச்சொல் என்றார்.
பண்பையுணர்த்தும் சொல் பண்புப் பெயர்ச் சொல் எனப்படுமே யன்றி உரிச்சொல்
எனப்படாது. 5.
“உலக வழக்குப் பொருள் ஒன்றாயிருக்க
இலக்கியக் கருத்தாக்கள் தனியுரிமையுடன் தரும் தனிப் பொருள் கொண்ட சொல்
உரிச்சொல்” என ஆதித்தர் கூறுவதும் (தொல். சொல். உரி-1. ஆதித்தியம்)
ஏற்க இயலாது. அவர் தரும் உதாரணம் ‘உரு’ என்பது உலக வழக்கில் உருவம் எனப்
பொருள்பட, அதனைப் புலவர் உட்கு (அச்சம்) என்ற பொருளில் தம் தனியுரிமையால்
ஆண்டனர் என்பது. தொல்காப்பிய உரியியற் சூத்திரங்களில் வந்துள்ள
உரிச்சொற்களுக்கு அவ்வாறு உலக வழக்குப் பொருளும் புலவரின்
தனியுரிமைப் பொருளும் உதாரணங்களாகக் காட்டிய அவர், சில சொற்களுக்கு உலக
வழக்குப் பொருள்கள் வலிந்து காட்டுவதும், சில சொற்களுக்குக்
காட்டாமலே போவதும் காணலாம். ‘உறு’ எனும் சொல் ‘உற்றான்’ என்னும்போது
வினைச் சொல் முதல் நிலையாகும். ‘உறுகால்’ என்னும்போது உரிச்சொல்
ஆகும், எழுத்து வடிவில் உறு என இருந்தாலும் பொருளளவில்
வினைச் சொல்லாகவும், உரிச்சொல்லாகவும்
வேறுபடுதலின் தனித்தனிச் சொற்களாகவே கொள்ளல் வேண்டும்.
6. சொல் பிறப்பதற்குரிய சொல் உரிச்சொல் என்னும் கருத்துக்கேற்ப
“உரிச்சொல் என்பன வினையும் வினைக்குறிப்பு |