நூல் xv
கேற்ப ஒற்றுத்திரிந்தும் திரியாதும் ஆதிநின்ற அகரம் ஐகாரமாயும் திரிந்தனவென்றும், ஈற்றுயிர்மெய்யும் ஈற்றயலுயிருங் கெட்டு ஆதி நீண்டதென்றும், ஈற்றுயிர்மெய்யும் இடையிலொற்றுங்கெட்டு ஆதி நீண்டதென்றும், பின்னுள்ளோர் சந்திமுடிக்கின்றது பொருந்தாது’ (தொல். எச்ச. சூ. 3-ந. உரை) என்னும் பகுதியை ‘‘ஈறுபோதல்’’ (135) என்னும் சூத்திரத்தின் மறுப்பாகக் கொள்ளின், நச்சினார்க்கினியர் காலத்திற்கு இந்நூலாசிரியர் காலம் முற்பட்டதென்று நினைத்தற்கு இடமுண்டு.
நூல்

இந்நூல், நூற்பா அகவல்களால் யாக்கப்பெற்றது; ‘‘முன்னோர் நூலின், வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்’’ (சிறப்பு. அடி 18-9) என்றதனால், இது முதனூலன்று; * எதிர்நூலுமன்று; தொல்காப்பிய முதலியவற்றை நோக்கும்போது வழி நூலாகவும் அகத்தியத்தை நோக்கும்போது ( சார்புநூலாகவும் இது கருதப்படும்; இந்நூலுள் ஆங்காங்குச் சூத்திரங்களினிறுதிகளில் அமைத்திருக்கும் ‘என்ப’ என்னும் பகுதிகளும் இதற்குச் சான்றாகும்.

தொல்காப்பியத்தின் பின்பு இயற்றப்பெற்ற இலக்கண நூல்களுள் இதைப்போலச் சிறந்தது வேறொன்றில்லையென்பது பெரியோர்கருத்து; பவணந்தி முனிவருடைய நூலாராய்ச்சிப் பெருமையையும் நூற்பாவியற்றும் வன்மையையும் நன்கு புலப்படுத்துவது; 48-ஆம் சூத்திரவுரையில் தன்மையாற் பெயர்பெற்ற நூலுக்கு இந்நூற்பெயர் உதாரணமாகக் காட்டப்பெற்றிருத்தலே இதன் பெருமையை நன்கு விளக்கும்.

இந்நூல் ஐந்ததிகாரங்களை யுடையதாகவே ஆதியிற் செய்யப் பெற்றதென்பதை, ‘‘பல்வகைத் தாதுவின்’’ என்னும் சூத்திரத்தின் விசேடவுரையிலுள்ள ‘சொல் எழுத்தாற் பெறப்படுதலின், எழுத்துச் சொற் பொருள் அணியென்னும் நான்கினும் நடப்பது யாப்பென்பதாயிற்று; ஆகவே ஐந்ததிகாரங்களும் தம்முள் ஒன்றையொன்று இன்றியமையாவெனக் கொள்க’ என்பதும், ‘‘பழையன கழிதலும்’’ என்னுஞ் சூத்திரத்தின் கருத்துரையிலுள்ள, ‘இந்நூலிற் சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்கநோக்காய் நிற்பதொரு புறநடையுணர்த்துதல் நுதலிற்று’ என்பதும்,


* இந்நூல் 62-ஆம் சூத்திரத்தின் விசேடவுரையையும் அதன் அடிக் குறிப்பையும் பார்க்க. (90-ஆம் சூத்திரவுரையைப் பார்க்க.