இலக்கண விளக்கம் என்னும் இவ்வுயரிய தமிழ் இலக்கண நூல் இயற்றமிழ் இலக்கணங்களை மூன்று பகுதிகளாக முறையாக உரைப்பதாகும். தொல்காப்பிய நெறியை வகைப்படுத்தித் தந்த பெருமை இந்நூலுக்குண்டு. நூலகம் இதுவரை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரு பகுதிகளையும்,மூன்றாம் பகுதியாகிய பொருளதிகாரத்தில் புறத்திணையியலையும் வெளியிட்டுள்ளது. இப்பகுதியின் அகத்திணையியலை இரண்டு தொகுதிகளாக அச்சிட்டுள்ளோம். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன. இப்பொழுது வாசக அன்பர்களுக்கு அணியியல் பிரிவை அளித்து மகிழ்கிறோம். இப்பகுதியின் தொடர்ச்சியான செய்யுளியல், பாட்டியல் ஆகிய இரு நூல்களும் அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நூலாசிரியர் வைத்தியநாத தேசிகர் அவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த முப்பெரும் இலக்கணப்புலவர்களுள் தலையாயவர். தருமை ஆதீனத்தைச் சார்ந்த தமிழ்ப் புலவர் பரம்பரையில் தோன்றிய இவர் தென்நாட்டை ஆண்ட நாயக்க மன்னர்களின் கவர்னர் ஒருவரின் மக்களுக்குச் சில காலம் கல்வி புகட்டி வந்திருக்கிறார். இவர் இலக்கணமேதை, கவிஞர், அறிஞர், ஆசிரியர். இத்தகு பெருமை சான்ற இவருடைய புலமையாலும் விடாமுயற்சியாலும் விளைந்த இந்நூல் இன்று நமக்கு உறுதுணையாயுள்ளது.
இந்நூலக வாயிலாக இலக்கண நூல்களை வெளியிட விழைந்தபோது, பல்வேறு ஒப்பு நூல்களை ஆதாரம் காட்டியும்,
|