அறுவகை இலக்கணம்
 

அறுவகை இலக்கணம்

1

 முனைவர். சி. பாலசுப்பிரமணியன்

  துணைவேந்தர்    

 

தமிழ்ப் பல்கலைக்கழகம்   தஞ்சாவூர்-613 005
அணிந்துரை
வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள் சென்ற நூற்றாண்டின் தமிழ்ப் பெருமக்களுள் தலைசிறந்தவராவார். முருகபத்திக்கு அவர் செய்துவந்த தொண்டைவிடத் தமிழ்மொழிக்கு அவர் ஊட்டிய வாழ்வும் வளமும் உயர்ந்து நின்றன எனலாம். அவர் புலவர் புராணம், அறுவகை இலக்கணம். ஏழாமிலக்கணம், திருவரங்கத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், தில்லைத் திருவாயிரம் எனத் தொடரும் பல புதிய நூல்களைத் தாமே இயற்றியும் தம்கைப்படவே ஓலைச் சுவடிகளில் எழுதிவைத்தும் பாடஞ்சொல்லியும் வெளியிட்டும் தமிழ்மொழியை வளம்பெறச்செய்தனர்.
அறுவகை இலக்கணம் என்னும் இவ் விலக்கண நூல் அவர் தம் தமிழிலக்கிய இலக்கணப் பயிற்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகும். இரு பதிப்புகளைக் கண்ட இந்நூல் இன்று உரையுடன் வெளிவருவது பெரிதும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
தமிழிலக்கண வரலாற்றில் சுவாமிகளுக்குத் தனியே ஒரு சிறப்பிடம் அமையுமாறு இந்நூல் திகழ்கிறது. வண்ணப் பாக்களிலும் சந்தப்பாக்களிலும் பெரிதும் ஈடுபாடு கொண்ட சுவாமிகள் முறையான இலக்கண நூல்களை யாத்தளித் திருப்பது தமிழர் செய்த தவப்பயனே எனலாம்.
இவ் விலக்கணம் இன்றைய மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டும் செய்திகளைத் தாங்கியுள்ளது என்பதை அறிஞர் பலரின் சாத்துகவிகள் காட்டுகின்றன.
‘அறம்பிழை படாவிதத்து அறுவகை இலக்கணம்’ என்றும்
  ‘மெய்வைத்த நாவினன் மேதகு மனத்தோன்’ என்றும்