தொடக்கம்

குறிஞ்சிப் பாட்டு

(ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர்பாடியது)

தோழி அறத்தொடு நிற்றல்
'அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல்,
ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,

5

வேறு பல் உருவின் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை நீயும் வருந்துதி
நல் கவின் தொலையவும், நறுந் தோள் நெகிழவும்,
புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும், 10
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்
செப்பல் வன்மையின் செறித்து, யான் கடவலின்,

தலைவியின் அன்பு மிகுதி


"முத்தினும் மணியினும் பொன்னினும், அத் துணை,
நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும்,
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின், 15
மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்,
ஆசு அறு காட்சி ஐயர்க்கும், அந் நிலை,
எளிய என்னார், தொல் மருங்கு அறிஞர்:
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப,
நெடுந் தேர் எந்தை அருங் கடி நீவி, 20
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என,
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கு" என
மான் அமர் நோக்கம் கலங்கி, கையற்று, 25
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்

மணம் நிகழ்ந்தமையைத் தோழி அறிவித்தல்


இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென்;
கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும், 30
வண்ணமும், துணையும், பொரீஇ எண்ணாது,
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல் ஆன்றிசின்; சினவாதீமோ!

தினைப்புனம் காத்த வகை


"நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை,
35
முத்து ஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப,
துய்த் தலை வாங்கிய புனிறு தீர் பெருங் குரல்
நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி,
எல் பட வருதியர்" என, நீ விடுத்தலின்,
கலி கெழு மரமிசைச் சேணோன் இழைத்த 40
புலி அஞ்சு இதணம் ஏறி, அவண,
சாரல் சூரல் தகை பெற வலந்த,
தழலும் தட்டையும் குளிரும், பிறவும்,
கிளி கடி மரபின, ஊழ் ஊழ் வாங்கி,
உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து 45

சுனையில் நீராடல்


விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர,
நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு,
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு,
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, 50
இன் இசை முரசின், சுடர்ப் பூண், சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்,
மின் மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென,
அண்ணல் நெடுங் கோட்டு இழிதரு தெள் நீர்,
அவிர் துகில் புரையும், அவ் வெள் அருவி, 55
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி,
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,
நளி படு சிலம்பில், பாயம் பாடி,
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்
பின் இருங் கூந்தல் பிழிவனம் துவரி, 60
உள்ளகம் சிவந்த கண்ணேம்,

பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல்


வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95
அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ,

தழை உடுத்து, மாலை சூடி, அசோகின் நிழலில் இருத்தல்


புள் ஆர் இயத்த விலங்கு மலைச் சிலம்பின்,
வள் உயிர்த் தெள் விளி இடைஇடைப் பயிற்றி, 100
கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியா,
பை விரி அல்குல் கொய்தழை தைஇ,
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை, எம்
மெல் இரு முச்சி, கவின் பெறக் கட்டி,
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் 105
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக

தலைவனது வருகை


எண்ணெய் நீவிய, சுரி வளர் நறுங் காழ்,
தண் நறுங் தகரம் கமழ மண்ணி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை 110
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப, தேம் கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்,
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறுந் தொடையல், வெண் போழ்க் கண்ணி, 115
நலம் பெறு சென்னி, நாம் உற மிலைச்சி,
பைங் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ, செந் தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப, சாந்து அருந்தி, 120
மைந்து இறை கொண்ட, மலர்ந்து ஏந்து அகலத்து,
தொன்று படு நறுந் தார் பூணொடு பொலிய,
செம் பொறிக்கு ஏற்ற, வீங்கு இறைத் தடக் கையின்
வண்ண வரி வில் ஏந்தி, அம்பு தெரிந்து,
நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி, 125
இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்
துயல் வரும் தோறும் திருந்து அடிக் கலாவ

தலைவனுடன் வந்த நாய்க்குத் தோழி முதலியோர் அஞ்சி வேறிடம் செல்லுதல்


முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்
பகை புறம் கண்ட பல் வேல் இளைஞரின்
உரவுச் சினம் செருக்கி, துன்னுதொறும் வெகுளும், 130
முளை வாள் எயிற்ற, வள் உகிர், ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர,
நடுங்குவனம் எழுந்து, நல் அடி தளர்ந்து, யாம்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர

தலைவன் மகளிரிடம் கெடுதி வினாவுதல்


மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து
135
ஆ காண் விடையின், அணி பெற வந்து எம்
அலமரல், ஆயிடை, வெரூஉதல் அஞ்சி,
மெல்லிய இனிய மே வரக் கிளந்து, எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, "ஒண் தொடி,
அசை மென் சாயல், அவ் வாங்கு உந்தி, 140
மட மதர் மழைக் கண், இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன்" என்றனன் அதன் எதிர்
சொல்லேம்ஆதலின், அல்லாந்து

தலைவன் தலைவியின் சொல்லை எதிர் பார்த்து நிற்றல்


"கலங்கிக்
கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு
சொல்லலும் பழியோ, மெல் இயலீர்?" என, 145
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின், இம்மென இமிரும்
மாதர் வண்டொடு, சுரும்பு நயந்து இறுத்த,
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி, 150
கல்லென் சுற்றக் கடுங் குரல் அவித்து, எம்
சொல்லல் பாணி நின்றனன் ஆக

யானை சினத்துடன் புனத்திற்கு வர, மகளிர் நடுங்கியமை


இருவி வேய்ந்த குறுங் காற் குரம்பை,
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,
தேம் பிழி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, 155
சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து,
இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது,
அரவு உறழ், அம் சிலை கொளீஇ, நோய் மிக்கு,
உரவுச் சின முன்பால் உடல் சினம் செருக்கி,
கணை விடு(பு), புடையூ, கானம் கல்லென, 160
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர,
கார்ப் பெயல் உருமின் பிளிறி, சீர்த் தக
இரும் பிணர்த் தடக் கை இரு நிலம் சேர்த்தி,
சினம் திகழ் கடாஅம் செருக்கி, மரம் கொல்பு,
மையல் வேழம், மடங்கலின், எதிர்தர, 165
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென,
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,
விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொருந்தி,
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க

யானையைத் தலைவன் அம்பு எய்து துரத்துதல்


வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி, கடு விசை, 170
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர,
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது,
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர்

நீரிலிருந்து எடுத்துத் தலைவன் காப்பாற்றியமை


நெடு வேள்
அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப, 175
திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய
துணை அறை மாலையின், கை பிணி விடேஎம்,
நுரையுடைக் கலுழி பாய்தலின், உரவுத் திரை
அடும் கரை வாழையின் நடுங்க, பெருந்தகை
"அம் சில் ஓதி! அசையல்; யாவதும் 180
அஞ்சல், ஓம்பு; நின் அணி நலம் நுகர்கு" என,
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,
என் முகம் நோக்கி நக்கனன்.

தலைவி தலைவனுடன் கூடிய நிலை


அந் நிலை,
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ 185
ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி,
பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை,
முழு முதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல், 190
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி,
அரிக் கூட்டு இன் இயம் கறங்க, ஆடு மகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்,
வரைஅர மகளிரின் சாஅய், விழைதக, 195
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய், நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன், எம் விழைதரு பெரு விறல்,

இருவரும் பகற்பொழுதைப் போக்கிய வகை


உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு,
200
"சாறு அயர்ந்தன்ன, மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா, வள நகர் பொற்ப,
மலரத் திறந்த வாயில் பலர் உண,
பைந் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு 205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,
நின்னோடு உண்டலும் புரைவது" என்று, ஆங்கு,
அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை
மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, 210
அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து,
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை, அப் பகல் கழிப்பி,
எல்லை செல்ல, ஏழ் ஊர்பு, இறைஞ்சி, 215
பல் கதிர் மண்டிலம், கல் சேர்பு மறைய

மாலைக்காலத்தின் வருகை


மான் கணம் மரமுதல் தெவிட்ட, ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ, 220
பாம்பு மணி உமிழ, பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட, வள மனைப்
பூந் தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயர, கானவர் 225
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப, கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ 230

தலைவன் பெயர்ந்த நிலை


"நேர் இறை முன்கை பற்றி, நுமர் தர,
நாடு அறி நல் மணம் அயர்கம்; சில் நாள்
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!" என,
ஈர நல் மொழி தீரக் கூறி,
துணை புணர் ஏற்றின், எம்மொடு வந்து, 235
துஞ்சா முழவின் மூதூர் வாயில்,
உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்.

தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து, தலைவி கலங்குதல்


அதற் கொண்டு,
அன்றை அன்ன விருப்போடு, என்றும்,
இர வரல் மாலையனே; வருதோறும்
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், 240
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்,
பெறாஅன்; பெயரினும், முனியல் உறாஅன்,
இளமையின் இகந்தன்றும் இலனே; வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே; கொன் ஊர் 245
மாய வரவின் இயல்பு நினைஇ, தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா
ஈரிய கலுழும், இவள் பெரு மதர் மழைக்கண்;
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்,
வலைப் படு மஞ்ஞையின், நலம் செலச் சாஅய், 250
நினைத்தொறும் கலுழுமால், இவளே

இரவில் தலைவன் வரும் வழியின் அருமை


கங்குல்,
அளைச் செறி உழுவையும், ஆளியும், உளியமும்,
புழற் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன்கண் வெஞ் சினத்து
உருமும், சூரும், இரை தேர் அரவமும், 255
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ் சுழி வழங்கும்
கொடுந் தாள் முதலையும், இடங்கரும் கராமும்,
நூழிலும், இழுக்கும், ஊழ் அடி முட்டமும்,
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர் 260
குழு மலை விடரகம், உடையவால் எனவே.'

இதன் பொருள்


ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.


குறிஞ்சிப்பாட்டு முற்றும்

தனிப் பாடல்கள்


நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்;
என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று
அருவி கொழிக்கும் அணி மலை நாடன்
தெரியுங்கால், தீயது இலன். 1

ஆற்றல் சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப்
போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற
மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின்
குறையாக் குறிஞ்சிக் குணம். 2