வையை

6. வையை


வையையில் பெருவெள்ளம்

நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
5
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
10
தாயிற்றே தண் அம் புனல்.


புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்

புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும், வையை வரவு.


வையையின் கரை உடைதலும், ஊரார் கிளர்ந்து எழுதலும்

தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க,
15
கொடி சேரா, திருக் கோவை காழ் கொள,
தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
20
முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
வரைச் சிறை உடைத்ததை வையை: 'வையைத்
திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக' எனும்
உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று.


மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்

25
அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென,
நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல;
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
30
துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்
அணிஅணி ஆகிய தாரர், கருவியர்,
அடு புனலது செல அவற்றை இழிவர்:
கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
35
வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ,


ஆற்றினது நீரோட்டம்

சேரி இளையர் செல அரு நிலையர்,
வலியர் அல்லோர் துறைதுறை அயர,
40
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும், யாறு வரலாறு.


அந்தணர்கள் கொண்ட கலக்கம்

நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து,
வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,
45
புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு.


பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்

மாறு மென் மலரும், தாரும் கோதையும்,
வேரும் தூரும், காயும் கிழங்கும்,
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப, 'நலன் அழிந்து,
50
வேறாகின்று இவ் விரி புனல் வரவு' என,
சேறு ஆடு புனலது செலவு.
வரை அழி வால் அருவி வாதாலாட்ட,
கரை அழி வால் அருவி கால் பாராட்ட,
'இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
55
புரைவது பூந் தாரான் குன்று' எனக் கூடார்க்கு
உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடி,
சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்
புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்
தான் மலர்ந்தன்றே,
60
தமிழ் வையைத் தண்ணம் புனல்.


இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு வையை நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்

'விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்.'
'தளிர் அறிந்தாய், தாம் இவை.'


களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை உரைத்தல்

'பணிபு ஒசி பண்ப! பண்டெல்லாம் நனி உருவத்து;
என்னோ துவள் கண்டீ?
65
எய்தும் களவு இனி: நின் மார்பின் தார் வாடக்
கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
செய்ததும் வாயாளோ? செப்பு.'


தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம் என

'புனை புணை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை
நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
70
பெருக்கு அன்றோ, வையை வரவு?'


தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து உரைத்தல்

'ஆம்ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல்! வையைப்
பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
75
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,
குருகு இரை தேரக் கிடக்கும் பொழி காரில்,
இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்
வையை வயமாக வை.
செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,
80
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை;
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;
வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்
அனற்றினை துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,
85
பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்
கனற்றுபு காத்தி, வரவு!'


தலைமகன் மேலும் கூறுதல்

'நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்
அல்லா விழுந்தானை எய்தி, எழுந்து ஏற்று யான்
90
கொள்ளா அளவை, எழும் தேற்றாள்: கோதையின்
உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது? என


காதற் பரத்தை கூற்று

தேறித் தெரிய உணர் நீ: பிறிதும் ஓர்
யாறு உண்டோ? இவ் வையை யாறு.


தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை

'இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்
95
தலை தொட்டேன், தண் பரங்குன்று!'


விறலிக்குத் தலைமகள் கூறுதல்

'சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்
துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்
அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே
100
வல் இருள் நீயல்; அது பிழையாகும்' என,
இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து,
வல்லவர் ஊடல், உணர்த்தர, நல்லாய்!
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
105
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
வாடற்க, வையை! நினக்கு.


'வையை நீர் விழவணியில் காதற்பரத்தை, "இற்பரத்தையுடன் நீராடினான் தலைமகன்' எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்' எனக் கேட்டதலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ் வையை நீர் விழவணியும், ஆங்குப் பட்ட செய்தியும் கூறி, வாயில் மறுத்தது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்

7. வையை


வையைப் புனலின் வருகை

திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி
5
இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது,
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன
பெயலாற் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
நலன் நந்த, நாடு அணி நந்த, புலன் நந்த,
10
வந்தன்று, வையைப் புனல்.


புனலின் செயல்

நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,
துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,
15
உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;
உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
ஆடல் அறியா அரிவை போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்,
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
20
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம் பூம் புனல்.


வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்

'கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
அவிழ்ந்த மலர் மீதுற்றென', ஒருசார்;
25
மாதர் மடநல்லார், மணலின் எழுதிய
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;
'அகவயல் இள நெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெ'னத் துடி பட, ஒருசார்;
'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;
30
'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்;
'பாடுவார் பாக்கம் கொண்டென,
ஆடுவார் சேரி அடைந்தென,
கழனி வந்து கால் கோத்தென,
பழன வாளை பாளை உண்டென,
35
வித்து இடு புலம் மேடு ஆயிற்றென',
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,
பழன உழவர், பாய் புனல் பரத்தந்து.


வையைப் புனலின் வனப்பு

40
இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,
வரை புரை உருவின் நுரை பல சுமந்து,
பூ வேய்ந்து, பொழில் பரந்து;
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,
அலர் தண் தாரவர், காதில்
45
தளிர் செரீஇ, கண்ணி பறித்து;
கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,
மேகலை, காஞ்சி, வாகுவலயம்,
எல்லாம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட
50
தானையான் வையை வனப்பு.


தோழி புனலணி இன்பம் கூறுதல்

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்
அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,
கை புதைஇய வளை
55
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்
போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு
பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்
செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;
60
வையைப் பெருக்கு வடிவு.


தோழி தலைமகன் காதன்மை கூறுதல்

விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,
கூர் நறா ஆர்ந்தவள் கண்.
65
கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப்
பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்
பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,
'என்னை வருவது எனக்கு?' என்று, இனையா,
நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;
70
சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர,
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர்தம்முள்
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,
75
தீர்விலதாகச் செருவுற்றாள் செம் புனல்
ஊருடன் ஆடுங்கடை.


தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்

புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;
80
மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க;
பொருது இழி வார் புனல் பொற்பு அஃது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!
85
நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே.


தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய்,தோழியை, 'நீங்கள் ஆடிய புனலணி இன்பம் கூறுக' என்றாட்கு, அப் புனலணி இன்ப மும், பல்வேறு வகைப்பட்ட இன்பமும், தலைமகன் காதன்மையும், கூறி, 'என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக, யாம்' என்றது.

மையோடக் கோவனார் பாட்டு
பித்தாமத்தர் இசை
பண்ணுப் பாலையாழ்

10. வையை


வையையில் நீர் வருகை

மலைவரை மாலை அழி பெயல் காலை,
செல வரை காணாக் கடல்தலைக் கூட
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,
5
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ, பறை அறையப்
போந்தது வையைப் புனல்.


புனலாடும் பொருட்டு மகளிர் வையைக் கரை சேர்தல்

புனல் மண்டி ஆடல் புரிவான், சனம் மண்டி,
10
தாளித நொய்ந் நூல் சரணத்தர், மேகலை
ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ,
நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும்
முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்தி;
புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,
15
மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும்,
அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய் மாச்
சகடமும், தண்டு ஆர் சிவிகையும், பண்ணி;
வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி;
முதியர், இளையர்: முகைப் பருவத்தர்,
20
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தன்னார்
இரு திற மாந்தரும் இன்னினியோரும்
விரவு நரையோரும் வெறு நரையோரும்
பதிவத மாதர், பரத்தையர்; பாங்கர்;
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள
25
விதி கூட்டிய இய மென் நடை போல,
பதி எதிர் சென்று, பரூஉக் கரை நண்ணி


கரை சேர்ந்த மகளிர் செயல்
அலர்வாய் அவிழ்ந்தன்ன பருவத்தையுடைய கற்புடைமகளிர், பரத்தையர் இவர்களின் செயல்

நீர் அணி காண்போர்; நிரை மாடம் ஊர்குவோர்;
பேர் அணி நிற்போர்; பெரும் பூசல் தாக்குவோர்;
மா மலி ஊர்வோர்; வயப் பிடி உந்துவோர்;
30
வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகி,
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர்; தழுவு எதிராது,
யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர்;
காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து,
சேமத் திரை வீழ்த்துச் சென்று, அமளி சேர்குவோர்:


முகைப் பருவத்து மகளிரின் செயல்கள்

35
தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்பட,
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின், சேம
மட நடைப் பாட்டியர்த் தப்பி, தடை இறந்து,
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார்போல்,
40
யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்


களிறு, பிடிகளின் ஒத்த அன்பு

ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மடப் பிடி கண்டு, வயக் கரி மால் உற்று,
நடத்த நடவாது நிற்ப; மடப் பிடி,
அன்னம் அனையாரோடு ஆயா நடை, கரிமேல்
45
செல் மனம் மால் உறுப்ப, சென்று; எழில் மாடத்துக்
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று,
மை புரை மடப் பிடி, மட நல்லார் விதிர்ப்புற,
செய் தொழில் கொள்ளாது, மதி செத்து, சிதைதர;
கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி
50
நீங்கும் பதத்தால், உருமுப் பெயர்த்தந்து
வாங்கி, முயங்கி வயப் பிடி கால்கோத்து,
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்
இதையும் கயிறும் பிணையும் இரியச்
சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்
55
திசை அறி நீகானும் போன்ம்.


மகளிர், மைந்தர் இவர்கள் செயல்

பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப, அழிந்த மனக் கோட்டையர்,
ஒன்றோடு இரண்டா முன்தேறார், வென்றியின்,
பல் சனம் நாணிப் பதைபதைப்பு மன்னவர்
60
தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை
ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி,
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்.
காமம் கனைந்து எழ, கண்ணின் களி எழ,
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை
65
கள்ளின் களி எழக் காத்தாங்கு, அலர் அஞ்சி,
உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள்
பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்
கரப்பார், களி மதரும் போன்ம்.
கள்ளொடு காமம் கலந்து, கரை வாங்கும்
70
வெள்ளம் தரும், இப் புனல்.


மகளிரது நீர் விளையாட்டு

புனல் பொருது மெலிந்தார் திமில் விட,
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ,
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து
திகை முழுது கமழ, முகில் அகடு கழி மதியின்
75
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்,
அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி,
எறி மகர வலயம் அணி திகழ் நுதலியர்,
மதி உண் அரமகளென, ஆம்பல் வாய் மடுப்ப;
மீப்பால் வெண் துகில் போர்க்குநர்; பூப் பால்
80
வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர்;
செங் குங்குமச் செழுஞ் சேறு,
பங்கம் செய் அகில் பல பளிதம்,
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழலென அரைக்குநர்;
85
நத்தொடு, நள்ளி, நடை இறவு, வய வாளை,
வித்தி அலையில், 'விளைக! பொலிக'! என்பார்;
இல்லது நோக்கி, இளிவரவு கூறாமுன்,
நல்லது வெஃகி, வினை செய்வார்;
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப,
90
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்;
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்;
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்,
கோலம் கொள, நீர்க்குக் கூட்டுவார்; அப் புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார்; ஒண் தொடியார்
95
வண்ணம் தெளிர, முகமும் வளர் முலைக்
கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்
பின்னும், மலர்க் கண் புனல்.


புனல் விளையாட்டால் மெலியாத மைந்தர் செயல்

100
தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும்,
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்,
வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும்,
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப்
பைய விளையாடுவாரும், மென் பாவையர்
105
செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்,
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி,
அம் தண் கரை நின்று பாய்வாராய், மைந்தர்
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி,
110
களிறு போர் உற்ற களம்போல, நாளும்
தெளிவு இன்று, தீம் நீர்ப் புனல்.


புனலாடி மீண்டவாறு

மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்
வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,
115
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்;
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,
120
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
125
கால் திரிய ஆர்க்கும் புகை.


வையையை வாழ்த்துதல்

இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப்
பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி,
செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஓயற்க
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்,
130
அருங் கறை அறை இசை வயிரியர், உரிமை
ஒருங்கு அமர் ஆயமொடு, ஏத்தினர் தொழவே.


பருவம் கண்டு வன்புறை எதிர் அழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு, தோழி தூது விட, சென்ற பாணன், பாசறைக்கண், தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவு அணியும், ஆங்குப் பட்ட செய்தியும், கூறியது.

கரும்பிள்ளைப் பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்

11. வையை


மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்

'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
5
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
10
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
15
நெரிதரூஉம் வையைப் புனல்.


தோழி திருமருதத் துறையின் சிறப்புக் கூறுதல்

'வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம் வாள்வீரம்,
20
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,
தாய தோன்றி தீயென மலரா,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்
25
வயவர் அரி மலர்த் துறை என்கோ?
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
பருகு படி மிடறு என்கோ? பெரிய
30
திருமருத நீர்ப் பூந் துறை.'


கண்டார் கூற்று

'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
35
வழியது பக்கத்து அமரர் உண்டி
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;
எண் மதி நிறை, உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
40
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு நாள் பெற!
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:'
45
என ஆங்கு
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு.


வையை போர்க்களத்தை ஒத்தல்

50
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர்
குந்தம் ஏந்துவோர், கொள்வார் கோல் கொள்ளக்
கொடித் திண் தேர் ஏறுவோர்,புள் ஏர் புரவி பொலம்
படைக் கைம்மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு
ஊர்பு உழக்குநரும், கண் ஆரும் சாயற் கழித்
55
துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்,
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்
உருகெழு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
60
பொரு களம் போலும் தகைத்தே பரி கவரும்
பாய் தேரான் வையை அகம்.


இளவேனிற் காலத்து ஆடல்

நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
65
புனை வினைப் பொலங் கோதையவரொடு,
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
70
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை.
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,
நீர் ஒவ்வா வையை! நினக்கு.


தைந் நீராடல்

கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க,
75
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து,
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
80
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
85
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
90
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!


மகளிர் செயல்கள்

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
95
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
100
கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்.
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே
105
மல்லிகா மாலை வளாய்.


மகளிர் கருத்தும், வேண்டிக்கோடலும்

தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
110
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப;
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்;
ஆயத்தில் கூடு' என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே
சேய் உற்ற கார் நீர் வரவு.
115
'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும்,
'"கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்' என்மாரும்,
'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும்,
120
'"கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!' என்மாரும்


ஒருவன் உவந்தவை காட்டுதல்

'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
125
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்:
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை
ஓர்மின்: பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப்
பாடி, கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும்
130
விரித்து ஆடும் தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ
நெரித்தாளை முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து,
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்
என ஆங்கு


தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்

இன்ன பண்பின் நின் தைந் நீராடல்
135
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
140
நறு நீர் வையை நயத் தகு நிறையே!


வரைவு மலிந்த தோழி, 'கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட் டேம்' என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

12. வையை


வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்

வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி,
விளிவு இன்று, கிளையொடு மேல் மலை முற்றி,
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்;
ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
5
அகரு, வழை, ஞெமை, ஆரம், இனைய;
தகரமும், ஞாழலும், தாரமும், தாங்கி,
நளி கடல் முன்னியது போலும், தீம் நீர்
வளி வரல் வையை வரவு.


புனல் வரவு காண மகளிர் சென்ற வகை

'வந்து மதுரை மதில் பொரூஉம், வான் மலர் தாஅய்,
10
அம் தண் புனல் வையை யாறு' எனக் கேட்டு,
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்,
பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும்,
அகில்கெழு சாந்தம் மாற்றி ஆற்றப்
புகைகெழு சாந்தம் பூசுவோரும்,
15
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்,
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்,
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்,
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்;
வாச நறு நெய் ஆடி, வான் துகள்
20
மாசு அறக் கண்ணடி வயக்கி, வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி,
வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும்;
இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர்,
கட்டு வடக் கழலினர், மட்டு மாலையர்,
25
ஓசனை கமழும் வாச மேனியர்,
மட மா மிசையோர்,
பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர்


நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்

கடு மா கடவுவோரும், களிறுமேல் கொள்வோரும்,
வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும்,
30
விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி,
ஆடல் தலைத்தலை சிறப்ப, கூடல்
உரைதர வந்தன்று, வையை நீர்; வையைக்
கரை தர வந்தன்று, காண்பவர் ஈட்டம்;
நிவந்தது, நீத்தம் கரைமேலா; நீத்தம்
35
கவர்ந்தது போலும், காண்பவர் காதல்.


கண்டவர் காண வருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக் கூறல்
கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக் காரணம் உரைத்தல்

முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி
ஒன்று அல, பலபல உடன் எழுந்தன்று; அவை
எல்லாம் தெரியக் கேட்குநர் யார்? அவை
கில்லா; கேள்வி கேட்டன சிலசில:
40
ஒத்த குழலின் ஒலி எழ; முழவு இமிழ்,
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி,
ஒத்து அளந்து; சீர் தூக்கி; ஒருவர் பிற்படார்;
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அத் தக அரிவையர் அளத்தல் காண்மின்.


கேட்டன கூறல்

45
'நாணாள்கொல் தோழி! "நயன் இல் பரத்தையின்
தோள் நலம் உண்டு, துறந்தான்" என, ஒருத்தி
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்,
நாணுக் குறைவு இலள்; நங்கை மற்று?' என்மரும்,
50
'கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்
ஓட்டை மனவன்; உரம் இலி' என்மரும்,
'சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள்; நிறம் திரிந்தாள்;
நெஞ்சத்தை நீத்தாள், நெறி செல்வான் பின் நிறை
அஞ்சிக் கழியாமோ, அன்பு உற்றால்?' என்மரும்,
55
'பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான், உவன்.
நாணாள் அவனை, இந் நாரிகை' என்மரும்


கண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக் காட்டல்

அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப,
கமழ் கோதை கோலாப் புடைத்து, தன் மார்பில்
இழையினைக் கை யாத்து, இறுகிறுக்கி வாங்கி,
60
'பிழையினை' என்ன, பிழை ஒன்றும் காணான்,
தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்.
'பார்த்தாள், ஒருத்தி நினை' என, 'பார்த்தவளைப்
பொய்ச் சூளாள் என்பது அறியேன், யான்' என்று இரந்து,
மெய்ச் சூள் உறுவானை, மெல்இயல், 'பொய்ச் சூள்' என்று,
65
ஒல்லுவ சொல்லாது, உரை வழுவச் சொல்ல;
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய,
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
70
பாய் குருதி சோர, பகை இன்று உளம் சோர,
நில்லாது நீங்கி நிலம் சோர; அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி, மம்மர் கூர்ந்து,
எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
75
வல்லதால், வையைப் புனல்.
என ஆங்கு
மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்,
அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல்,
குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி,
80
நல் இணர் நாகம், நறவம், சுரபுன்னை,
எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழ;
தேறித் தெளிந்து, செறி இருள் மால் மாலை;
பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று;
துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும்:
85
கார் அடு காலை, கலிழ் செங் குருதித்தே
போர் அடு தானையான் யாறு.
சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த
கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ,
விடு மலர்ப் பூங் கொடி போல நுடங்கி,
90
அடிமேல் அடிமேல் ஒதுங்கி, தொடி முன்கைக்
காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள்,
நேர் இறை முன்கை நல்லவள்; கேள் காண்மின்.


நீர்விழவின் சிறப்பு

துகில் சேர் மலர் போல், மணி நீர் நிறைந்தன்று;
'புனல்' என, மூதூர் மலிந்தன்று, அவர் உரை;
95
உரையின் உயர்ந்தன்று, கவின்.
போர் ஏற்றன்று, நவின்று; தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று;
துகில் பொசி புனலின், கரை கார் ஏற்றன்று;
விசும்பு கடி விட்டன்று, விழவுப் புனல் ஆங்க.


வையையை வாழ்த்துதல்

100
இன்பமும், கவினும், அழுங்கல் மூதூர்,
நன்பல நன்பல நன்பல வையை!
நின் புகழ் கொள்ளாது, இம் மலர் தலை உலகே.


கார்ப் பருவத்து வையை நீர் விழவணியில் பல் வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, 'இவ் வகைப்பட்ட இன்பத்தை உடைய நின்னையும் நினைத்திலர்' என,வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, தோழி இயற்பழித்தது.

நல்வழுதியார் பாட்டு
நந்நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

16. வையை
 


வையையில் நீர் வரவு

கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,
மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,
எவ் வயினானும் மீதுமீது அழியும்.
5
துறையே முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி
வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,
தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
10
தத்து அரிக் கண்ணார் தலைதலை வருமே.
செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
15
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்.
கான் அல்அம் காவும், கயமும், துருத்தியும், தேன்
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்
பூத்தன்று வையை வரவு.


தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு வாய்த்தல்

20
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து,
குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,
இருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை;
பூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர்
25
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்
நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,
மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி,
குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,
30
'பூத்தனள் நங்கை; பொலிக!' என நாணுதல்
வாய்த்தன்றால் வையை வரவு.


வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்

மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்
கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்
35
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தாஅய்;
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,
தேன் இமிர் வையைக்கு இயல்பு.


வையைக்கு உரிய இயல்பு

கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
40
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை,
பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,
செல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,
45
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத்
தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்
கொடித் தேரான் வையைக்கு இயல்பு.


தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்

வரை ஆர்க்கும் புயல்; கரை
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
50
கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர்,
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்
நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,
பூத்த புகையும், அவியும் புலராமை
மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்
55
வறாஅற்க, வையை! நினக்கு.


காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட,அவள் புனல் ஆடியவாறு கூறி, வாயில் மறுத்தது.

நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்

20. வையை


புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்

கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து சூல் முதிர் முகில்
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
5
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று.
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
10
கான் ஆற்றும் கார் நாற்றம்,கொம்பு உதிர்த்த கனி நாற்றம்;
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.


புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வகை

தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று
வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று: உயர் மதிலில்
15
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ,
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,
வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,
கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
20
மகளிர் கோதை மைந்தர் புனையவும்,
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,
25
மாட மறுகின் மருவி மறுகுற,
கூடல் விழையும் தகைத்து தகை வையை.


தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து நேர்ந்த நிகழ்ச்சி

புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,
தகை வகை தைஇயினார் தார்;
வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்
30
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும்
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்
அயல் அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர்
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,
35
நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க,


தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதலும்

தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;
செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன
நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.


தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்

40
என ஆங்கு,
ஒய்யப் போவாளை, 'உறழ்ந்தோள் இவ் வாணுதல்'
வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,
'செறி நிரைப் பெண்' வல் உறழ்பு 'யாது தொடர்பு?' என்ன
45
மறலினாள், மாற்றாள் மகள்.


தலைமகளின் திகைப்பு

வாய் வாளா நின்றாள்,
செறிநகை சித்தம் திகைத்து.


ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்

ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!
50
பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத்
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,
காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,
மூரி தவிர முடுக்கு முது சாடி!
55
மட மதர் உண்கண் கயிறாக வைத்துத்
தட மென் தோள் தொட்டு, தகைத்து மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்
தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்
60
வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து,
மத்திகை மாலையா மோதி, அவையத்துத்
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து, யாம்.
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
65
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்


பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று

தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு
ஊடினார், வையையகத்து.
'சிந்திக்கத் தீரும் பிணியாட் செறேற்க;
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை
70
வந்திக்க வார்' என


பரத்தையின் பதில் உரை

'மனத் தக்க நோய் இது;
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,
மாற்றாளை மாற்றாள் வரவு.'


தலைவி கூற்று

75
'அ...சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா;
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு.'


பரத்தையின் மறுமொழி

80
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்
கால சிலம்பும் கழற்றுவான்; சால,
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.'
என ஆங்கு


கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல்

85
வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே.


தலைமகளுக்கு முனிவு நீங்க உரைத்தல்

சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
90
இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;
நிகழ்வது அறியாது நில்லு நீ, நல்லாய்!
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம்; என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல்!
95
கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!'


வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின் சுருங்கை வழியே பாயும் காட்சி

என ஆங்கு
இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும்,
தென்னவன் வையைச் சிறப்பு.
கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,
100
அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,
குடை விரிந்தவை போலக் கோலும் மலர்,
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,
சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,
அருவி சொரிந்த திரையின் துரந்து;
105
நெடு மால் சுருங்கை நடு வழிப் போந்து
கடு மா களிறு அணத்துக் கை விடு நீர் போலும்
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது.


பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு

நாம் அமர் ஊடலும் நட்பும், தணப்பும்,
110
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,
தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல்
பூ மலி வையைக்கு இயல்பு.


பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப் பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

22. வையை


மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்

ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத்தவைபோல் கொண்மூ நெரிதர,
அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்
முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,
5
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி, அவன்
வண்மைபோல் வானம் பொழிந்த நீர் - மண்மிசை
ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்
10
தானையின் ஊழி...... தாவூக் கத்தின்,
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-
.... ... ... நீக்கிப் பு...
கான மலைத்தரை கொன்று மணல பினறீ
வான மலைத்த ...... வ
15
....... லைத்தவ மண முரசு எறிதர,
தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,


மைந்தரும் மகளிரும் கரையையும் வையையையும் சேர்கின்ற அழகு

பொறிவி யாற்றுறி - துவர், புகை, சாந்தம்,
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற
நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,
20
பிற தொழின ... ம் பின்பின் தொடர;
செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,
தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;
மாவும், களிறும், மணி அணி வேசரி,
25
காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி;
வேல் ஆற்றும் மொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்-
போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,
தார் அணி மைந்தர் தவப் பயன் சான்மென-
கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,
30
வார் அணி கொம்மை, வகை அமை மேகலை,
ஏர் அணி இலங்கு எயிற்று, இன் நகையவர்-
'சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்?' எனத்
தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-
35
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்.


திருமருத முன்துறைக் காட்சிகள்

மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
எதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப,
கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்
புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,
40
ஊது சீர்த் தீம் குழல் இயம்ப, மலர்மிசைத்
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,
....... துடிச் சீர் நடத்த வளி நடன்
மெல் இணர்ப் பூங் கொடி மேவர நுடங்க,
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-
45
தீம் புனல் வையைத் திருமருத முன்துறையால்.
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,
... ... ... புரை தீர் நெடு மென்
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,
நீள் தாழ்பு தோக்கை, நித்தில அரிச் சிலம்பு,
50
...

தி 2. வையை


வையையில் புனல் விரைந்து வருதல்

மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ,
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான்,
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ,
காமரு வையை கடுகின்றே, கூடல்.


புதுப் புனலை விரும்பி மக்கள் கோலம் கொண்டு செல்லுதல்

5
'நீர் அணி கொண்டன்று வையை' என விரும்பி,
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி,
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்
சேர் அணி கொண்டு, நிறம் ஒன்று வெவ்வேறு
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி,
10
ஏர் அணி கொண்டார், இயல்.


வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல்

கை புனை தாரினர், கண்ணியர்,
ஐ எனும் ஆவியர், ஆடையர்,
நெய் அணி கூந்தலர், பித்தையர்,
மெய் அணி யானை மிசையராய், ஒய்யெனத்
15
தங்காச் சிறப்பின் தளிர் இயலார் செல்ல;
பொங்கு புரவிப்புடைப் போவோரும், பொங்கு சீர்
வையமும் தேரும் அமைப்போரும்; எவ் வாயும்
பொய்யாம் போய் என்னாப் புடை கூட்டிப் போவநர்
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார்; வையத்துக்கு
20
ஊடுவார்; ஊடல் ஒழிப்பார்; உணர்குவார்:
ஆடுவார், பாடுவார்; ஆர்ப்பார், நகுவார்; நக்கு
ஓடுவார்; ஓடித் தளர்வார்; போய், உற்றவரைத்
தேடுவார்; ஊர்க்குத் திரிவார் இலராகி-
கற்றாரும், கல்லாதவரும், கயவரும்,
25
பெற்றாரும், பெற்றாற் பிழையாத பெண்டிரும்,
பொற்றேரான் தானும், பொலம் புரிசைக் கூடலும்,
முற்றின்று-வையைத் துறை.


நீராடற் காட்சிகள்
தலைவன் பரத்தைமையைத் தோழி குறிப்பால் உணர்த்துதல்

துறை ஆடும் காதலர் தோள் புணையாக,
மறை ஆடுவாரை அறியார் மயங்கி,
30
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன்
நிகழும் நிகழ்ச்சி எம்பால் என்று, ஆங்கே,
இகல் பல செல்வம் விளைத்தவட் கண்டு, இப்பால்,
அகல் அல்கும் வையைத் துறை.
காதலான் மார்பின் கமழ் தார், புனல் வாங்கி,
35
ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு, 'மற்று அது
தா தா' என்றாளுக்கு, 'தானே புறன் தந்து
வேய்தந்தது'. 'என்னை? விளைந்தமை மற்று அது
நோதலே செய்யேன், நுணங்கு இழையாய்! இச் செவ்வி
போதல் உண்டாம்கொல்? அறிந்து புனல் புணர்த்தது!
40
ஓஒ! பெரிதும் வியப்பு.
கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை
நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும்
முயக்குக்கு, செவ்வி முலையும் முயக்கத்து
நீரும் அவட்குத் துணை; கண்ணின் நீர் விட்டோய்!
45
நீயும் அவட்குத் துணை.


குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல்

பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்,
மணி எழில், மா மேனி, முத்த முறுவல்,
அணி பவளச் செவ் வாய், அறம் காவற் பெண்டிர்
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
50
தணிவின்று, வையைப் புனல்.


தலைவன் கூற்று

'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
55
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால்,
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-


பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்

'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
60
'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று,
அந்தணர் தோயலர், ஆறு.
'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'
ஐயர், வாய்பூசுறார், ஆறு.


வையை நுரை முதலியவற்றோடு பெருகிச் சென்ற வகை

விரைபு இரை விரை நுரை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்,
65
கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை,
நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை புரளிய செலும்மறி கடல்,
புகும் அளவுஅளவு இயல் இசை சிறை தணிவின்று,வெள்ள மிகை.


திருமருத முன்துறை

வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில்
மணி அணி யானைமிசை, மைந்தரும் மடவாரும்,
70
நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று,
குரு மணி யானை இயல் தேர்ப் பொருநன்
திருமருத முன்துறை முற்றம் குறுகி,
தெரி மருதம் பாடுப, பிணி கொள் யாழ்ப் பாணர்.
பாடிப் பாடி, பாய்புனல்
75
ஆடி ஆடி, அருளியவர்
ஊடி ஊடி, உணர்த்தப் புகன்று
கூடிக் கூடி, மகிழ்பு மகிழ்பு,
தேடித் தேடி, சிதைபு சிதைபு,
சூடிச் சூடி, தொழுது தொழுது,
80
மழுபொடு நின்ற மலி புனல் வையை
விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி,
இமிழ்வது போன்றது, இந் நீர்-குணக்குச் சான்றீர்!
முழுவதும் மிச்சிலா உண்டு.


சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல்

சாந்தும், கமழ் தாரும், கோதையும், சுண்ணமும்,
85
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன
பூவினும், அல்லால், சிறிதானும் நீர் நிறம்
தான் தோன்றாது-இவ் வையை ஆறு.
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்
கழு நீர மஞ்சனக் குங்குமக் கலங்கல்
90
வழி நீர்; விழு நீர அன்று-வையை.


பாண்டியன் கூடலாரொடு வையை நீராடிய மாட்சி

வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்,
உரு கெழு கூடலவரோடு, வையை
வரு புனல் ஆடிய தன்மை பொருவுங்கால்-
இரு முந்நீர் வையம் படித்து என்னை? யான் ஊர்க்கு
95
ஒரு நிலையும் ஆற்ற இயையா! அரு மரபின்,
அந்தர வான் யாற்று, ஆயிரம் கண்ணினான்
இந்திரன் ஆடும் தகைத்து.


இப் பாடல், தொல்காப்பியம், செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர் உரையில் கண்டது.

தி 3. வையை
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப,
...
செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை
மறு முறையானும் இயைக! நெறி மாண்ட
5
தண் வரல் வையை எமக்கு.


இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், 
நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப் பகுதி 'அறவோர் உள்ளார்' என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய வருகின்றது.


தி 4. வையை
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
பரிமா நிரையின் பரந்தன்று வையை.


இப் பகுதி திருக்குறள் (23) பரிமேலழகர் உரையைப் பற்றிய 'நுண் பொருள் மாலை' யால் தெரிய வருகின்றது.