கரையே கைவண் தோன்றல்

16. வையை


வையையில் நீர் வரவு

கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,
மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,
எவ் வயினானும் மீதுமீது அழியும்.
5
துறையே முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி
வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,
தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
10
தத்து அரிக் கண்ணார் தலைதலை வருமே.
செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
15
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்.
கான் அல்அம் காவும், கயமும், துருத்தியும், தேன்
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்
பூத்தன்று வையை வரவு.


தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு வாய்த்தல்

20
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து,
குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,
இருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை;
பூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர்
25
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்
நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,
மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி,
குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,
30
'பூத்தனள் நங்கை; பொலிக!' என நாணுதல்
வாய்த்தன்றால் வையை வரவு.


வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்

மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்
கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்
35
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தாஅய்;
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,
தேன் இமிர் வையைக்கு இயல்பு.


வையைக்கு உரிய இயல்பு

கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
40
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை,
பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,
செல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,
45
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத்
தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்
கொடித் தேரான் வையைக்கு இயல்பு.


தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்

வரை ஆர்க்கும் புயல்; கரை
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
50
கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர்,
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்
நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,
பூத்த புகையும், அவியும் புலராமை
மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்
55
வறாஅற்க, வையை! நினக்கு.


காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட,அவள் புனல் ஆடியவாறு கூறி, வாயில் மறுத்தது.

நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்