பாடினோர் பகுதி
இறங்குகுடிக் குன்ற நாடன்

215. பாலை
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறு பல் மொழிய தேஎம் முன்னி,
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி,
5
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே,
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
10
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்,
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை,
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு,
15
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.

செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன்