பாடினோர் பகுதி
உறையூர் முதுகூத்தனார்

137. பாலை
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
5
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
10
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
15
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி
சொல்லியது.- உறையூர்

முதுகூத்தனார்

329. பாலை
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து,
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து,
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்,
5
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர்
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப்
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து,
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து,
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு,
10
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை,
பனி படு சிமையப் பல் மலை இறந்தே?

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார்