பாடினோர் பகுதி

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

179. பாலை
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு,
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி
5
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது,
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்
நல் நிலை பொறித்த கல் நிலை அதர,
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
10
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை,
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்,
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம்
மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?

பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கொடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

232. குறிஞ்சி
காண் இனி வாழி, தோழி! பானாள்,
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின்,
மாஅல் யானை புலி செத்து வெரீஇ,
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும்
5
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே,
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
மன்ற வேங்கை மண நாட் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர்
10
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும்,
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி,
'முருகு' என வேலற் தரூஉம்.
15
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே.

தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்