பாடினோர் பகுதி

நக்கீரர், நக்கீரனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரை நக்கீரர், மதுரை நக்கீரன

36. மருதம்
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
5
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
10
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
15
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்,
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
20
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!

தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர்

57. பாலை
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
5
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
10
யாமே எமியம்ஆக, தாமே
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
15
முதுநீர் முன்துறை முசிறி முற்றி,
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
பானாட் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர்

78. குறிஞ்சி
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
5
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
10
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என,
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
15
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு,
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
20
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?

களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார்

93. பாலை
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
5
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
10
நாள் அங்காடி நாறும் நறு நுதல்
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
15
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
20
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.

வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார்

120. நெய்தல்
நெடு வேள் மார்பின் ஆரம் போல,
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
5
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
10
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
15
அன்றில் அகவும் ஆங்கண்,
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?

தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார்

126. மருதம்
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
5
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
10
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
15
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
20
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

141. பாலை
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
5
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
10
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
15
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
20
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
25
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.

'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்

205. பாலை
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல,
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
5
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
10
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி,
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல
15
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி,
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
20
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர்

227. பாலை
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே;
திதலை அல்குல் வரியும் வாடின;
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
5
இனையல் வாழி, தோழி! நனை கவுள்
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப்
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப,
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
10
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து,
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள்,
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
15
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை,
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப்
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்,
20
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து,
எல் உமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

249. பாலை
அம்ம வாழி, தோழி! பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
5
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி,
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
10
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
15
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
உழை மான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார்

253. பாலை
'வைகல்தோறும் பசலை பாய, என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
5
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல நினைந்து,
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
10
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து,
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
15
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
20
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
25
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - நக்கீரர்

290. நெய்தல்
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
5
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது,
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன்,
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
10
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம்
மணவா முன்னும் எவனோ தோழி!
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
15
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ,
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர்

310. நெய்தல்
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,
5
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,
10
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப!
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
15
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து
உரும் இசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.

தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார்

340. நெய்தல்
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி,
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து,
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
5
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன்
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள்
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென,
கழியே ஓதம் மல்கின்று; வழியே
10
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்;
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என,
நின் திறத்து அவலம் வீட, இன்று இவண்
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
15
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே;
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர்
20
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன்,
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு,
முன்றில் தாழைத் தூங்கும்
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே?

பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர்

346.மருதம்
நகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்,
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து,
5
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி,
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை
10
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப்
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர!
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி,
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
15
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,
எம் மனை வாராயாகி, முன் நாள்,
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக்
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர்,
இழை அணி யானைப் பழையன் மாறன்,
20
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
25
கோதை மார்பன் உவகையின் பெரிதே.

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர்

369. பாலை
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
5
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
10
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்!
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
கடல்அம் தானை கை வண் சோழர்,
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
15
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை,
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
20
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
25
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
மேயினள்கொல்?' என நோவல் யானே.

மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர்

389. பாலை
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
5
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
10
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து,
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
15
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல்
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
20
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரனார்