பாடினோர் பகுதி

பொருந்தில் இளங்கீரனார்

19. பாலை
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
5
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
10
சேயிதழ் அனைய ஆகி, குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
15
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
பூ வீ கொடியின் புல்லெனப் போகி,
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!

நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்

351. பாலை
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
5
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற,
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
10
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி,
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
15
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
உள்ளுதொறு படூஉம் பல்லி,
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?

பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்