பாடினோர் பகுதி

மதுரைக் கூத்தனார்

334. முல்லை
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக!
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
5
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து,
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
10
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
15
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப்
பொலிவன அமர்த்த உண்கண்,
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார்