பாடினோர் பகுதி

மருதம் பாடிய இளங்கடுங்கோ

96. மருதம்
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
5
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
10
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
15
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.

தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ

176. மருதம்
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
5
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
10
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
15
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
20
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
25
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.

தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் -
பாடிய இளங்கடுங்கோ