கணையன்

 
44. முல்லை
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
5
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
10
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
15
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார்

 
386. மருதம்
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர!
நாணினென், பெரும! யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
5
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து, நல்ல கூறி,
10
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
நுதலும் கூந்தலும் நீவி,
15
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.

தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்