சேரலாதன்

 
55. பாலை
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்,
5
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
10
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
15
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
காதல் வேண்டி, எற் துறந்து
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.

புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்

 
127. பாலை
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
வலம் படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
5
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
10
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
15
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்

 
347. பாலை
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
5
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
10
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
15
கெடு மகப் பெண்டிரின் தேரும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்