தித்தன்

 
6. மருதம்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
5
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
10
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
15
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
20
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
இளமை சென்று தவத் தொல்லஃதே;
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்

 
122. குறிஞ்சி
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
5
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
10
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
15
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
20
ஆதி போகிய பாய்பரி நன் மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர்

 
152. குறிஞ்சி
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
5
சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை,
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
10
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
களி மயிற் கலாவத்தன்ன. தோளே
15
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச்
20
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇ,
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்

 
226. மருதம்
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
நாண் இலை மன்ற யாணர் ஊர!
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
5
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
10
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
15
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர்