பிட்டன்

 
77. பாலை
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
5
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
10
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
15
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.

தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார்

 
143. பாலை
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
5
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
10
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
15
தண் கமழ் நீலம் போல,
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார்