பொறையன்

 
338. குறிஞ்சி
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்,
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்,
5
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
10
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
15
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து,
20
வழங்கல் ஆனாப் பெருந் துறை
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்