வடுகர்

 
107. பாலை
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
5
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
10
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
15
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
மாலை இன் துணைஆகி, காலைப்
20
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.

தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

 
213. பாலை
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
5
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
10
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
15
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
20
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை,
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்,
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார்

 
253. பாலை
'வைகல்தோறும் பசலை பாய, என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
5
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல நினைந்து,
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
10
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து,
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
15
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
20
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
25
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - நக்கீரர்

 
281. பாலை
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
5
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
10
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து, அவரோ சென்றனர்
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

 
295. பாலை
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
5
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள்
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்தி,
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
10
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
15
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
20
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண்,
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்

 
375. பாலை
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
5
கல்லா இளையர் கலித்த கவலை,
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
10
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
15
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்,
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார்

 
381. பாலை
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
5
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
10
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானை,
15
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
20
எதிர் மலர் இணைப் போது அன்ன. தன்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார்