அகல் அறை மலர்ந்த

 
105. பாலை
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
5
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி,
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு,
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
10
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
15
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம்
முகை தலை திறந்த வேனிற்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?

மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார்