அம்ம வாழி தோழி இம்மை

 
101. பாலை
அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
5
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
10
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
15
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்