விருந்தும் பெறுகுநள் போலும்

 
324. முல்லை
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
5
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில்
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சால,
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய,
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய்,
10
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
செல்லும், நெடுந்தகை தேரே
15
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!

வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார்