வேந்து வினை முடித்தகாலை

 
104. முல்லை
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
5
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
வாங்குசினை பொலிய ஏறி; புதல
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
10
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய,
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
15
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
ஆய் தொடி அரிவை கூந்தற்
போது குரல் அணிய வேய்தந்தோயே!

வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார்