தண் கயம் பயந்த

 
395. பாலை
தண் கயம் பயந்த வண் காற் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
5
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர்
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
10
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
ஆடு கழை இரு வெதிர் நரலும்
15
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!

பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்