நகை நனி உடைத்தால்

 
180. நெய்தல்
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக,
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி,
வீ ததை கானல் வண்டல் அயர,
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து,
5
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
10
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன்
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப்
பொன் நேர் நுண் தாது நோக்கி,
15
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.

இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார்