மங்குல் மா மழை

 
294. முல்லை
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
5
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
10
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
15
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமையானே.

பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்